பாஜக அமைச்சர்கள் ராஜினாமா: காங் ஆதரவுடன் ஆட்சியில் தொடர குமாரசாமி திட்டம்!
பெங்களூர்:
கர்நாடகத்தில் பெரும் அரசியல் திருப்பமாக பாஜகவைச் சேர்ந்த 17 அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்து முதல்வர் குமாரசாமியை சந்தித்து கடிதத்தைக் கொடுத்தனர். அடுத்து ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறவும் பாஜக தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
பாஜகவுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி முதல்வர் குமாரசாமி, தனது முதல்வர் பதவியை நேற்று மாலைக்குள் ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக கெடு விதித்திருந்தது. ஆனால் குமாரசாமி இதற்கு மறுப்பு தெரிவித்தார்.
இதையடுத்து நேற்று மாலை பாஜகவைச் சேர்ந்த 17 அமைச்சர்களும் குமாரசாமியை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களைக் கொடுத்தனர்.
அவர்களிடம், 5ம் தேதி வரை பொறுத்திருக்குமாறு குமாரசாமி கோரியுள்ளார். ஆனால் அதை பாஜக அமைச்சர்கள் நிராகரித்து விட்டனர். இதையடுத்து கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என்று கூறி குமாரசாமி, அவர்களை அனுப்பி வைத்துள்ளார்.
பாஜக அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்து விட்டதால் கர்நாடகத்தில் பெரும் அரசியல் பரபரப்பு எழுந்துள்ளது. அடுத்தபடியாக ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற பாஜக தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இன்று அல்லது நாளைக்குள் ஆளுநரை சந்தித்து ஆதரவு வாபஸ் கடிதத்தை பாஜக வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜகவின் இந்த அதிரடியால் குழம்பிப் போன மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் தேவெ கெளடாவும், முதல்வர் குமாரசாமியும், காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெறும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
பாஜக தனது ஆதரவை வாபஸ் பெறுவதற்கு முன்பு காங்கிரஸின் ஆதரவைப் பெற்று விட கெளடா திட்டமிட்டுள்ளார். ஆனால், பாஜகவுடனான தொடர்புகளை முழுமையாக துண்டித்துக் கொண்டால்தான் ஆதரவு குறித்துப் பரிசீலிக்க முடியும் என காங்கிரஸ் கட்சி கூறி வருவதாக தெரிகிறது.
கர்நாடகத்தில் நிலவும் பரபரப்பான சூழ்நிலையால் அஙகு இடைத் தேர்தல் வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications