பஞ்சாயத்து பணியாளர்களுக்கு செல்போன்!
விக்கிரமசிங்கபுரம் (நெல்லை):
நெல்லை மாவட்டம் சிவந்திபுரம் பஞ்சாயத்து குடிநீர் பணியாளர்களுக்கு சபாநாயகர் இரா.ஆவுடையப்பன் இலவச செல்போன்களை வழங்கினார்.
சிவந்திபுரம் பஞ்சாயத்தில் வேலை பார்க்கும் குடிநீர் பணியாளர்களுக்கு இலவச செல்போன் வழங்கும் விழா மற்றும் முழு சுகாதார இயக்கம் மூலம் வீடுகளில் நவீன கழிப்பிடம் அமைக்க 24 பேருக்கு தலா ஆயரத்து 200 ரூபாய் மானியம் வழங்கும் விழா சிவந்திபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்தது.
விழாவில் சபாநாயகர் ஆவுடையப்பன் கலந்து ெகாண்டு பேசுகையில்,
சிவந்திபுரம் பஞ்சாயத்தில் நீண்ட நாட்களாக குடிநீர் பற்றாக்குறை இருந்தது. அதை போக்க கடந்த ஒரு ஆண்டில் புதிய தண்ணீர் தொட்டி மற்றும் குடிநீரேற்ற தொட்டி கட்டி குடிநீர் தட்டுபாட்டை போக்கி இருக்கிறேன்.
ஒரு சில பகுதிகளில் குடிநீர் வழங்குவது தாமதமாகி உள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் கிடைப்பதில்லை.
மேலும் இந்த பஞ்சாயத்துக்கு பாபநாசத்தில் இருந்தும், ஆலடியுரில் இருந்தும் குழாய்களில் குடிநீர் கொண்டு வரும் வழியில் உடைப்புகள் ஏற்பட்டு பொது மக்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே இந்த குறைகளை நீக்குவதற்காக குடிநீர் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு செல்போன் வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இனி தாமதம் இல்லாமல் குடிநீர் வழங்கப்பட வேண்டும்.
பணியாளர்களாகிய நீங்கள் குடிநீர் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் அந்தப் பிரச்சனை உங்களை பாதிக்காது. ஆனால் இங்குள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளை பாதிக்கும். ஏன், என்னை கூட பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு துரிதமாக பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications