பாஜக-அதிமுக கூட்டணி வரும்: இல.கணேசன்
திருச்சி:
பாஜக, அதிமுக இடையே கூட்டணி வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன என்று பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
ஸ்ரீரங்கத்தில் திருச்சி மாவட்ட பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட இல.கணேசன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராமர் பால விவகாரத்தில் பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக, மதிமுக மற்றும் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஆகியவை கருத்து தெரிவித்து வருகின்றன.
எனவே வருகிற தேர்தலில் இவர்களுடன் குறிப்பாக அதிமுக, மதிமுகவுடன் கூட்ணி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரும். வந்தவுடன், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஒழிக்கப்பட்ட பொடா போன்ற கடுமையான சட்டங்களை மீண்டும் கொண்டு வருவோம்.
தமிழக அரசின் சிறுபான்மையினருக்கான 7 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டத்தை எதிர்த்து வருகிற 17ம் தேதி பாஜக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் இல.கணேசன்.