அண்ணன் தாக்கப்பட்டதை தடுத்த தம்பி கொலை
அம்பாசமுத்திரம்:
அண்ணனை தாக்கியதை தடுத்த தம்பியை கொலை செய்த கும்பலுக்கு போலீஸார் வலை வீசியுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் கடையம் முதலியார்பட்டியை சேர்ந்தவர் ஆதம்சேட். இவரது மகள் மீராவுக்கு, ஆதம்சேட்டின் மனைவி மைதீன் பாத்துவின் தம்பி ஜமால் என்பவர் சென்னையில் மாப்பிள்ளை பார்த்தாராம்.
இது ஆதம் சேட்டுக்குப் பிடிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் அவருக்கும், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்களிடையே பகை இருந்து வந்துள்ளது.
இதனால் வேதனையடைந்த மைதீன்பாத்து, தனது மகள் மீராவை அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து ஆதம்சேட் மாமியார் வீட்டிற்கு போய் சத்தம் போட்டு விட்டு கருத்தையாபுரத்திலுள்ள தன் தம்பி முகமது நாகூர் வீட்டுக்கு சென்று விட்டார்.
மருமகன் வந்த தகவலை ஜமாலின் தாய் லோகையா, ஜமாலிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த ஜமால் ஒரு ஆட்டோவில் சில ஆட்களுடன் கருத்தையாபுரம் சென்று அங்கு முகமது நாகூர் வீட்டில் இருந்த மைத்துனன் ஆதம் சேட்டிடம் தகராறு செய்துள்ளார்.
தகராறு முற்றி கலப்பாக மாறியது. அண்ணனைத் தாக்க வந்தவர்களை முகம்மது நாகூர் தடுத்துள்ளார். அப்போது அவரை அக்கும்பல் சரமாரியாக தாக்கி விட்டுத் தப்பியது.
உயிருக்கு போராடிய 2 பேரையும் அம்பை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முகமது நாகூர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிய கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.