வீட்டுக் கடனுக்கான வட்டி குறைகிறது?
டெல்லி:
வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை மாற்றி அமைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இதனால் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வருவதால் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்து கடன் வழங்க பாரத ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே வீட்டுக் கடன் வாங்கியிருப்பவர்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கவும் ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து வங்கித் தலைவர் ஓ.பி.பட் கூறுகையில், வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை மாற்றிய அக்க வேண்டுமானால், அது இப்போது இருப்பதை விட குறைவாகத்தான் அமையும்.
பண்டிகைக் காலம் துவங்குவதை ஒட்டி, வங்கிகள் புதிய வீட்டுக்கடன் அளிக்கும் போது, வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் அல்லது தள்ளுபடி வழங்க வேண்டும்.
பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக்கடன் வட்டி விகிதத்தைக் குறைப்பது மற்றும் புதிய வீட்டுக்கடன்களுக்கு தள்ளுபடி அளிப்பது குறித்து வங்கியின் சொத்து மற்றும் பொறுப்புக்குழு முடிவு செய்யும்.
பண்டிகைக் காலத்தின் போது வீட்டுக் கடன் வாங்குவோருக்கு, எங்கள் வங்கி தள்ளுபடியை அறிவிக்க உள்ளது. வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி விரைவில் மாற்றியமைக்க உள்ளது. அப்போது, தற்போதைய வட்டி விகிதம் வெகுவாக குறையும். ஆனால் கண்டிப்பாக கட்டணம் உயராது என்றார் பட்.
ரிசர்வ் வங்கியின் முடிவுக்காக, தனியார் மற்றும் அரசு வங்கிகள் காத்திருக்கின்றன. அக்டோபர் 30ம் தேதி இது பற்றிய முடிவை ரிசர்வ் வங்கி அறிவிக்க உள்ளது.
கிடுகிடுவென உயர்ந்து வரும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறையுமா என்ற ஆவலில் கடன் வாங்கி வீடு வாங்கியவர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications