வழக்குகள் குறித்துக் கவலை இல்லை: பாலு
டெல்லி:
ராமர் பால விவகாரம் தொடர்பாக என் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று கூறுவோரைக் கண்டு நான் பயப்படவில்லை, அதை சந்திப்பேன் என்று மத்திய கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.ரபாலு கூறியுள்ளார்.
முன்னாள் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் எம்.என்.கிருஷ்ணமணி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.
அதில், உச்சநீதிமன்றத்தின் மதிப்பைக் குறைக்கும் வகையில் டி.ஆர்.பாலு பேசியுள்ளார். அவர் மீது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதற்காக மூத்த நீதிபதிகள் ஐந்து பேரைக் கொண்ட பெஞ்ச்சை அமைக்க வேண்டும்.
டி.ஆர்.பாலு, உச்சநீதிமன்ற நீதிபதிகளை 'கொம்பன்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி விமர்சித்துள்ளார். இது அனைத்து பத்திரிக்கைளிலும் செய்தியாக வெளியாகியுள்ளது.
இந்த கடிதத்தையே டி.ஆர்.பாலுவுக்கு எதிரான புகார் மனுவாக பாவித்து, டி.ஆர்.பாலு மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்தக் கடிதத்தின் நகல்களை மூத்த நீதிபதிகளான பி.என்.அகர்வால், அசோக் பான் ஆகியோருக்கும் கிருஷ்ணமணி அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் நடந்த 2வது பிராந்திய சர்வதேச சாலைகள் மாநாட்டில் கலந்து கொண்ட டி.ஆர்.பாலுவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ராமர் பால விவகாரம் குறித்து நான் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பாக என் மீது சிலர் புகார் கூறியுள்ளனர்.
அது விசாரணைக்கு வந்தால் அதை நான் சந்திப்பேன். என் மீது புகார் கூறுவோர் குறித்து நான் பயப்படவில்லை, கவலைப்படவும் இல்லை என்றார் பாலு.
தமிழகத்தில் திமுக கூட்டணி அறிவித்திருந்த பந்த்துக்குத் தடை விதித்து நீதிபதி பி.என்.அகர்வால், திமுக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். இதை டி.ஆர்.பாலு கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார்.
இந்த நிலையில் டி.ஆர்.பாலு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக் கோரி கிருஷ்ணமணி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications