ஐ.டி. நிறுவனங்களின் பெருக்கம் எதிரொலி; சென்னையில் குவியும் 5 ஸ்டார் ஹோட்டல்கள்!
சென்னை:
சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெருகி வருவதால், 5 நட்சத்திர ஹோட்டல்கள் குவியத் தொடங்கியுள்ளன.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 7க்கும் மேற்பட்ட ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் சென்னையில் வரவுள்ளன. தற்போது உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் வாடகையும் கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளதாம்.
பிற பெருநகரங்கள் கூட தேவைகளைப் பூர்த்தி செய்யத் திணறி வரும் நிலையில் சென்னையில் நிலைமை தலைகீழாக உள்ளதாம். 2011ம் ஆண்டு வாக்கில் சென்னையில் பெரிய அளவிலான ஹோட்டல்கள் வந்து விடும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து எம்பீ குழுமத்தைச் சேர்ந்த நிஷா புருஷோத்தமன் கூறுகையில், சென்னை ஒரு தூங்கும் யானை. இங்கு அனைத்து விதமான அடிப்படைக் கட்டமைப்பும் சிறப்பாக உள்ளன. முதலீட்டுக்கு ஏற்ற சூழ்நிலை நிலவுகிறது. இதன் காரணமாக சென்னை மாநகரம் வேகமாக விரிவடைந்து வருகிறது என்றார்.
பிரபலமான லீலா குழுமம் 380 அறைகள் கொண்ட பிரமாண்ட ஹோட்டலைக் கட்டி வருகிறது. 90 மில்லியன் டாலர் முதலீட்டில் இது உருவாகி வருகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த ஹோட்டல் திறக்கப்படவுள்ளது.
எம்பீ குழுமத்தின் சார்பில் திறக்கப்படவுள்ள ஹில்டன் இன்டர்நேஷனல் தவிர வெல்கம்குருப்பின் கிராண்ட சோழா, ஜேடிபள்யு மாரியாட், தாஜ் ஜிவிகே ஆகிய பிரபல ஹோட்டல்களும் சென்னைக்கு வந்து கொண்டுள்ளன.
பிற பெருநகரங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டல்களின் வாடகை குறைவாகவே உள்ளது. ஒரு நாளைக்கு ரூ. 8000 முதல் ரூ. 10,000 வரை வாடைகை உள்ளது.