பஹ்ரைனில் குமரி வாலிபர் மர்மச் சாவு
நாகர்கோவில்:
பஹ்ரைனில் வேலை பார்த்து வந்த கன்னியாகுமரி மாவட்ட வாலிபர் மர்மமான முறையில் மரணமடைந்தார். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரியுள்ளனர்.
குமரி மாவட்டம் புதுக்கடை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கீழ்குளம் வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தங்கமணி. இவரது மகன் சிங். இவர் கடந்த ஒராண்டுக்கு முன்பு அரபு நாடான பஹ்ரைனுக்கு வேலைக்கு சென்றார். வாரம்தோறும் வீட்டுக்கு தொலைபேசி மூலம் பேசி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி புதன்கிழமையன்று இவருக்கு விடுமுறை என்பதால் அவர் வசிக்கும் பகுதியில் இருந்து வேறு பகுதியில் வசிக்கும் நண்பர்களை சந்திக்க சென்றவர் வீடு திரும்பவில்லையாம்.
இது குறித்து அங்கே வசிக்கும் சிங்கின் உறவினர்கள் பல இடங்களில் விசாரித்தும், தேடி பார்த்தும் இவரைப் பற்றி தகவல் கிடைக்காத காரணத்தினால் பஹ்ரைன் போலீசில் புகார் செய்து விட்டு குமரியில் வசிக்கும் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
மகன் அரபு நாட்டில் காணாமல் போன செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தந்தை தங்கமணி மற்றும் உறவினர்கள் நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர் பெல்லார்மின் எம்.பி, முன்னாள் எம்.பி டென்னீஸ் ஆகியோரை சந்தித்து முறையிடவே அவர்கள் உடனடியாக பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். மேலும் அவரை மீட்கவும் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால் பஹ்ரைனில் இருந்து எந்த தகவலும் கிடைக்காமல் தவித்து வந்த அவரது பெற்றோருக்கு பஹ்ரைனில் இருந்து யாரோ ஒருவர் போன் செய்து உங்கள் மகன் சிங் இறந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.
அந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பஹ்ரைனுக்கு போன் பண்ணி விவரம் கேட்கவே உங்கள் மகனின் உடலை அனுப்பியுள்ளோம் என்று அவர்கள் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 27ம் தேதி விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு உடல் வந்தது. சிங்கின் குடும்பத்தினர் உடலைப் பெற்று கீழ்குளம் வாழைத்தோட்டத்திற்குக் கொண்டு வந்தனர்.
அங்கு உடலை பார்த்தபோது தான் அவரது உடலிலும், முகத்திலும் காயம் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரது சாவில் மர்மம் உள்ளதாகவும், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் உறவினர்கள் சந்தேகிக்கின்றனர்.
இவரது மரணம் பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளதால் அவரது குடும்பத்தினர் மீண்டும் நாகர்கோவில் எம்.பி பெல்லர்மின் மூலம் பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்புக் கொண்டு சிங் மரணத்தின் உண்மை காரணத்தினை தெரிவிக்க கேட்டுள்ளனர்.
மேலும் குமரி மாவட்ட ஆட்சியரிடமும் அவரது குடும்பத்தினர் தனது மகன் சாவில் சந்தேகம் உள்ளதாக புகார் கொடுத்துள்ளனர்.
குமரி மாவட்ட வாலிபர் பஹ்ரைன் நாட்டில் மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இறந்த சிங்கிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.