பந்த்தைத் தடுக்கத் தவறி விட்டார் கருணாநிதி - ஜெ.
சென்னை
உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி, அக்டோபர் 1ம் தேதி, திமுக அரசின் ஆதரவுடன்தான் தமிழகத்தில் பந்த் நடத்தப்பட்டது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த அக். 1ம் தேதி தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகள் நடத்தவிருந்த பந்த்துக்கு உச்சநீதிமன்றம் செப். 30ம் தேதி தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. ஆனால் தடை உத்தரவையும் மீறி, முதலமைச்சர் மற்றும் அமைச்சர் ஆகியோரின் தூண்டுதலுக்கு போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உட்பட்டு அரசு பேருந்துகள் எதுவும் கடந்த அக்.1ம் தேதி இயக்கப்படவில்லை.
போக்குவரத்து கழகங்களில் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட அதிமுக தொழிற்சங்கத்தினர் பேருந்துகளை இயக்க முன்வந்தும் கூட அவர்களுக்கும் பேருந்துகள் தரப்படாமல் டெப்போவிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
மக்களுடைய இயல்பு நிலை பாதிக்கப்பட்ட காரணத்தால் அதிமுக தரப்பில் அக். 1ம் தேதியன்று இந்த பிரச்சனையை உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்து சென்றது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழகத்தில் அரசியல் அமைப்பு சட்டம் மீறப்பட்டிருக்கின்றது.
மத்தியில் இருக்கும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி அரசு, தமிழக அரசைக் கலைக்க ஏன் தயங்குகிறது என்ற கருத்துக்களை வெளியிட்டதுடன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அதிமுகவுக்கு அனுமதியும் வழங்கியது.
இப்போது கருணாநிதி ஒரு புதிய விளக்கத்தை கொடுத்திருக்கிறார். உச்ச நீதிமன்றத்தின் தடை ஆணை தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு, அதாவது கடந்த செப்.30ம் தேதி இரவு 10-30 மணிக்கு தான் கிடைத்தது என்றும், பந்த் ஆரம்பிப்பதற்கும், உச்ச நீதிமன்ற ஆணை வருவதற்கும் இடையில் ஒரு சிலமணி நேரங்களே இருந்தது.
அதனால் அதைப்பற்றி அனைவருக்கும் தெரிவிக்க கால அவகாசம் போதவில்லை என்றும் உச்சநீதிமன்றத்தின் ஆணை சற்று முன்பாக கிடைத்திருந்தால் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றிருக்காது என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
உச்சநீதிமன்ற பந்த் நடத்த தடை விதித்ததுடன், அக். 1ம் தேதியன்று உண்ணாவிரதம் நடக்கும் என்று பேட்டியளித்த கருணாநிதி, உச்சநீதிமன்றம் பந்த்துக்கு தடை விதித்து விட்டதால் வழக்கம் போல் அக். 1ம் தேதியன்று அனைத்து பேருந்துகளும், பள்ளி மற்றும் கல்லூரிகளும் இயங்கும் என்று அறிவித்திருக்க வேண்டும்.
கருணாநிதிக்கு அவ்வாறு அறிவிக்க மனம் வராவிட்டாலும் தமிழக அரசின் தலைமை செயலாளரை அழைத்து தமிழக அரசின் சார்பில் ஓர் அறிக்கை வெளியிடச் செய்திருக்க வேண்டும். தலைமை செயலாளரும் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்க வேண்டும்.
ஆனால், கருணாநிதி இதை வேண்டுமென்றே தவிர்த்து தனது கடமையை செய்ய தவறிவிட்டார். தலைமைச் செயலாளரையும் அறிக்கை வெளியிட விடாமல், அவரையும் தனது கடமையை செய்யவிடாமல் தடுத்து விட்டார். இதன் மூலம் உச்ச நீதிமன்றத்தின் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்.
மேலும், தான் உட்பட மற்ற அமைச்சர்களும் அலுவலகப் பணிகளை மேற்கொண்டதாகவும், அனைத்து அலுவலகங்களிலும் பணிகள் நடைபெற்றன என்றும், சில பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கின என்றும், அனைத்து ரயில்களும் இயங்கின என்றும், விமான சேவையில் எந்தவித தடையும் இல்லை எனவும் அடுக்கடுக்காக பொய்களை கூறியிருக்கிறார்.
ஆனால் தலைமைச் செயலகமும், பல்வேறு அரசு அலுவலகங்களும் வெறிச்சோடி காண்ப்பட்டன என்றும், 26 உள்ளூர் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன என்றும், பேருந்துகள் எதுவும் இயங்கவில்லை என்றும் அனைத்து நாளிதழ்களிலும் செய்தி வெளிவந்தது.
இதனால் அன்றைய தினம் ஆட்டோக்களில் 3 முதல் 4 மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டதால் தமிழக மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு விட்டது.
கருணாநிதியும், தமிழக அரசின் தலைமை செயலாளரும் பந்த்திற்கு துணை போக வேண்டும் என்ற நோக்கத்திலேயே இவ்வாறு செயல்பட்டுள்ளார்கள் என்பது இதன் மூலம் தெரியவருகிறது என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications