செல்போனில் பேசியபடி மாடியிலிருந்து கீழே விழுந்தவரால் முதியவர் பரிதாப சாவு
சென்னை:
செல்போனில் பேசியபடி 4வது மாடியிலிருந்து கீழே விழுந்தவரால், 70 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மொபைல் போன் என்பதால் பலரும் அதை நடந்தபடியும், வாகனங்களில் சென்றபடியும்தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதனால் பல ஆபத்துக்கள் இருப்பதை பலரும் புரிந்து கொள்வதில்லை.
மாடியில் நின்று செல்போனில் பேசியபோது தவறி கீழே விழுந்து இறந்தவர்கள், கை கால்களை உடைத்துக் கொண்டவர்கள் குறித்த செய்திகள் அதிக அளவில் வந்துகொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் சென்னையில் மாடியிலிருந்து செல்போன் பேசியபடி கீழே விழுந்தவர், 70 வயது முறுக்கு வியாபாரியின் மேலே விழுந்து அந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
சென்னை மின்ட் தெருவைச் சேர்ந்தவர் கிரண் ராஜ். இரும்புக் கடை வைத்துள்ள இவரது மகன் பெயர் ரவி. இவர் தனது தந்தையின் தொழிலுக்கு உதவியாக உள்ளார்.
இவர் தனது கடையின் 4வது மாடியில் உள்ள மொட்டை மாடியில் நின்றபடி செல்போனில் பேசியுள்ளார். அப்போது நடந்தபடியே பேசிக் கொண்டிருந்தார்.
இதில் நிலை தடுமாறி மேலிருந்து கீழே விழுந்தார். கீழே விழுந்த அவர் அங்கு தள்ளுவண்டியில் முறுக்கு வியாபாரம் செய்து கொண்டிருந்த 70 வயது முதியவர் மீது விழுந்தார். இதில் அந்த முதியவர் படுகாயமடைந்தார். ரவியின் காலும் உடைந்தது.
இருவரையும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முறுக்கு வியாபாரி ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து யானை கவுனி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications