திமுக இளைஞர் அணி மாநாடு ஏன்? - மு.க. ஸ்டாலின் விளக்கம்
திருநெல்வேலி:
தமிழகத்தில் திசை மாறி செல்லும் இளைஞர்களை ஒருநிலைபடுத்த நெல்லையில் மாநில இளைஞரணி மாநாடு நடைபெறவுள்ளது என்று நெல்லையில் நடைபெற்ற மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
ஸ்டாலின் பேசுகை
யில், இங்கு பேசியவர்கள் நான் ஆணையிட்டால் அதனை நாங்கள் நிறைவேற்றுவதாக சொன்னார்கள். நான் ஆணையிட வரவில்லை. உங்களோடு ஆலோசனை நடத்தவும், உங்களது அறிவுரைகளை கேட்டு கடமைகளை நிறைவேற்றவும் தான் வந்துள்ளேன்.
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவது குறித்த அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி திசை மாறி செல்லும் இளைஞர்களை நல்வழிப்படுத்தி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முன் வர வேண்டும் என்று பேசினார்.
அதன் அடிப்படையில்தான் நெல்லையில் வருகிற டிசம்பர் 16ம் தேதி மாநில இளைஞரணி மாநாடு நடைபெறுகிறது. கட்சியின் பல்வேறு துணை அமைப்புகள் இருந்தாலும் இளைஞரணிக்கு தனிச் சிறப்பு உண்டு.
1980ம் ஆண்டு ஜான்சி பூங்காவில் இந்த இயக்கம் துவக்கப்பட்டது. தற்போது இந்த இயக்கம் ஒரு மாபெரும் இயக்கமாக மாறி உள்ளது. இந்த மாநாட்டை நெல்லையில் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டபோது அமைச்சர் துரைமுருகன் நெல்லை தொல்லை என்று கூறினார்.
தொல்லை எங்குள்ளதோ அங்குதான் இந்த மாநாட்டை நடத்த வேண்டும் என்று தலைவர் கருணாநிதி கூறினார்.
வைகோ கட்சியை விட்டு பிரிந்து சென்றபோது நெல்லை மாவட்டத்தில் இருந்து பெரும்பான்மையானோர் அவரோடு செல்லவில்லை. எனவே இங்கு உள்ளவர்கள் கட்டுக்கோப்போடு செயல்படுவார்கள். அதனால் மாநாடு இங்கு நடத்தப்படுகிறது.
2 மாதங்களுக்கு முன்பே நீங்கள் வேலை செய்ய தொடங்கி விட்டீர்கள். இது உங்கள் கட்டுகோப்பையும், எழுச்சியையும் காட்டுகிறது.
இந்த மாநாடு ஒரு சரித்திர சாதனை மாநாடாகவும் வித்தியாசமான மாநாடாகவும் வெளிநாட்டவரும் வியக்கும் மாநாடாகவும் அமைய வேண்டும். இந்த மாநாட்டை ஒரு நாள் மாநாடாகவே நடத்த திட்டமிட்டோம். உங்களது எழுச்சியை பார்த்து 2 மாநாடாக நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இந்த மாநாடு திமுக ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications