2011 வரை திமுகவுடன் கூட்டணி - ராமதாஸ்
சென்னை:
2011ம் ஆண்டுவரை திமுக கூட்டணியில் நாங்கள் தொடர்ந்து நீடிப்போம். மத்தியில் உள்ள ஆட்சிக்கு கண்டிப்பாக இடைத்தேர்தலும் வராது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் நிருபர்களுக்கு கொடுத்த பேட்டியில் அவர் கூறியதாவது,
வெளிநாடுகளில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக நமது நாட்டில் தமிழகத்தில் இளைஞர்கள் அதிகமாக உள்ளனர். தமிழக மக்கள் தொகையில் இளைஞர்கள் 43 சதவீதம் பேர் இருக்கிறார்கள்.
செயல் துடிப்பும், ஆற்றல் வளமும் கொண்ட நமது இளைஞர்களை முறையாக நெறிப்படுத்தி வழி நடத்தினால் நாடு வளம் பெறும். தற்போது அவர்கள் நடிகர், நடிகைகளுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் வழிபாடு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். போதை, புகை பழக்கத்திற்கு ஆளாகி வருகிறார்கள். மது குடிப்பதில் தமிழ்நாடு இந்தியாவில் 2வது இடத்தில் இருக்கிறது.
இந்த நிலையை மாற்றும் நோக்கத்தில் இளைஞர்கள் மறுமலர்ச்சி ஒரு பயனுள்ள அணுகுமுறை என்ற திட்டத்தை தயாரித்து இருக்கிறோம். இளைஞர்களுக்கு தரமான கல்வி, வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இளைஞர் சக்தியை பயன்படுத்தாத நாடு வளர்ச்சி அடையாது.
பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கிரிக்கெட் மோகத்துக்கு எதிராக நான் மட்டும் தான் குரல் கொடுக்கிறேன். எனக்கு ஆதரவாக எவரும் பின்னால் இல்லை. அனைத்து விளையாட்டுகளுக்கும், அரசு ஊக்கம் அளிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் செல்போன்கள் தடை செய்யப்பட வேண்டும்.
முதலமைச்சர் இசைப் பல்கலைக்கழகம் அமைத்ததை வரவேற்கிறோம். ஆனால் 17 இசை பள்ளிக் கூடங்கள் தொடங்கப்பட்டு அனாதையாக, ஆதரவு இல்லாமல் இருக்கின்றது. கட்டிடங்கள் இல்லாமலிருக்கும் அந்த பள்ளிகள் மீது முதல்வர் கவனம் செலுத்த வேண்டும். அரசு பள்ளிகளில் இசையை கட்டாய பாடமாக கொண்டு வரவேண்டும். இசை பல்கலைக்கழகத்தை தமிழிசை பல்கலைக்கழகமாக கொண்டு வரவேண்டும் என்பது என் விருப்பமாகும்.
மத்தியில் இடைத்தேர்தல் வருவதற்கு வாய்ப்பு இல்லை. எங்கள் கூட்டணியிலும் நிச்சயம் எந்தவொரு மாற்றமும் இல்லை. 2011 வரை திமுக ஆட்சியை ஆதரிப்போம். கர்நாடகாவில் நடக்கும் அரசியல் கேலி கூத்தானது. அரசியலில் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. மின் உற்பத்தி தேவை அதற்காக ஒரு ஏக்கர் விவசாய நிலத்தை கூட எடுக்கக் கூடாது. தமிழ்நாட்டில் 23 சதவீத தரிசு நிலங்கள் உள்ளன. அந்த இடங்கலை அரசு தேர்வு செய்ய வேண்டும்.
இது போன்ற எனது கருத்துக்களை சொன்னால் ஆளும் கட்சியின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதாக சித்தரித்து பேசுகிறார்கள் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.












Click it and Unblock the Notifications