கர்நாடகத்தில் ஜனாதிபதி ஆட்சி!!
டெல்லி:
கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து இன்று இரவுக்குள் அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படவுள்ளது.
கர்நாடகத்தில் ஆளுக்கு 20 மாதம் என்ற ஒப்பந்தத்தின் பேரில் மதச்சார்பற்ற ஜனதாதளமும், பாஜகவும் கூட்டணி ஆட்சியை நடத்தி வந்தன.
ஒப்பந்த காலம் முடிவடைந்த நிலையில், ஒப்பந்தப்படி ஆட்சியை பாஜகவிடம் ஒப்படைக்க முடியாது என்று மதச்சார்பற்ற ஜனதாதளம் கூறியதால் பிரச்சினை எழுந்தது. பல கட்ட பேச்சுவார்த்தைகள் பலனளிக்காத நிலையில், முதல்வர் குமாரசாமி தலைமையிலான ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக விலக்கிக் கொண்டது.
இதனால் குமாரசாமி அரசு மெஜாரிட்டியை இழந்தது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர், ஆட்சியை கலைக்குமாறு மாநில ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்த ஆளுநர் தாக்கூர், பதவியிலிருந்து விலகுமாறு குமாரசாமிக்கு அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து பதவியிலிருந்து விலகினார் குமாரசாமி.
இதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு கூறி உள்துறை அமைச்சகத்திற்கு ஆலுநர் பரிந்துரை செய்தார்.
இந்த பரிந்துரையை இன்று மத்திய அமைச்சரவை பரிசீலித்தது. இறுதியில், கர்நாடக ஆளுநரின் பரிந்துரையை ஏற்று அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து கர்நாடக மாநிலத்தில் இன்று இரவுக்குள் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுகிறது. இது தொடர்பான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பிறப்பிப்பார்.












Click it and Unblock the Notifications