ஷார்ஜா-திருச்சி விமானத்தில் மோதிய பருந்து- 160 பயணிகள் தப்பினர்
திருச்சி:
ஷார்ஜாவிலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் விமானத்தின் மீது பருந்து மோதியதால் அந்த விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றது.
ஷார்ஜாவிலிருந்து 160 பயணிகளுடன் இந்தியன் நிறுவனத்தைச் சேர்ந்த ஏர்பஸ் விமானம் நேற்று காலை 7 மணிக்கு திருச்சி வந்தது. இந்த விமானம் திருச்சி வழியாக சென்னைக்குச் செல்வதாகும்.
திருச்சியில் தரையிறங்கிய பின்னர் 7.40 மணிக்கு அந்த விமானம் சென்னைக்குக் கிளம்பியது. அப்போது, விமானத்தின் மூக்குப் பகுதியில் ஒரு பருந்து மோதியது. மோதிய வேகத்தில் அது இறந்தது.
இதையடுத்து விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. விமானத்தின் மீது விழுந்து கிடந்த பருந்தின் உடல் பாகங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. விமானத்தில் சேதம் ஏற்பட்டிருக்கிறதா என்பது சோதிக்கப்பட்டது.
பின்னர் சுமார் ஒரு மணி நேர தாமதத்திற்குப் பின்னர் அந்த விமானம் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றது.
விமான நிலையத்திற்கு அருகே குப்பைகளைக் கொட்டி வைக்கும் ஒரு தொட்டி நிரம்பி வழிந்துள்ளது. ஆனால் அதை அப்புறப்படுத்தாமல் தொடர்ந்து குப்பையைக் கொட்டி வந்துள்ளனர். இதனால் அங்கு காகம், பருந்து, கழுகு உள்ளிட்ட பறவைகள் அதிக அளவில் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன.
திருச்சி விமான நிலையத்திலிருந்து தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமல்லாமல், ஷார்ஜா, கொழும்பு உள்ளிட்டி வெளிநாடுளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. தினசரி பல விமானங்கள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.
இப்படிப்பட்ட நிலையில் விமான நிலையத்தின் ரன்வே பகுதிக்கு அருகே குப்பைகளை சரிவர பராமரிக்காமல் அதிகாரிகள் அஜாக்கிரதையாக இருந்து வருவது கண்டிக்கத்தக்கது.