மறுபடியும் ஸ்டான்லியில் மர்மக் காய்ச்சல்
சென்னை:
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் மீண்டும் மர்ம காய்ச்சல் பரவியுள்ளதை அடுத்து மருத்துவம் பயிலும் மாணவ-மாணவிகள் 7பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி விடுதியில் தங்கியிருக்கும் மாணவ-மாணவிகளுக்கு 2 வாரங்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் வந்து அவதிப்பட்டார்கள்.
15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மாணவி கரீமா பிரதான் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். சேர்க்கப்பட்ட மற்ற மாணவர்கள் தீவிர சிகிச்சைக்கு பின்னர் உயிர் பிழைத்தனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிக்கு கடந்த 3ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டது.
மர்ம காய்ச்சல் பரவுவதற்கு முக்கிய காரணம், ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இருக்கும் சுற்றுப்புற சீர்கேடுதான் காரணம் என்று அனைவராலும் புகார் கூறப்பட்டது. இந்த புகாரையடுத்து தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து விடுதி வளாகத்தை சீரமைத்தது.
இதன் பின்னர் கடந்த 4ம் தேதி கல்லூரி மீண்டும் திறக்கப்பட்டது. மாணவ-மாணவிகள் அனைவரும் நேற்று முதல் வகுப்புகளுக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இறுதி ஆண்டு மருத்துவம் படிக்கும் மாணவர்களான கதிர்வேல், பாபு, ஜெயக்குமார் ஆகியோர் மீண்டும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இதே போன்று நர்சிங் படிக்கும் 4 மாணவிகளும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவ-மாணவிகள் 7 பேர் மீண்டும் மர்ம காய்ச்சல் தாக்கப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications