கி.வீரமணி மீது சு.சுவாமி அவமதிப்பு வழக்கு
சென்னை:
தமிழக பந்த் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி பி.என்.அகர்வால் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியதன் மூலம் நீதிமன்றத்தை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவமதித்து விட்டார். அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரி ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இத்தகவலை தெரிவித்தார் சுவாமி. அவர் கூறுகையில்,
தமிழகத்தில் திமுக கூட்டணி சார்பில் பந்த் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து நான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.
அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பந்த் நடத்தத் தடை விதித்தது. இந்த நிலையில் முழு அடைப்புக்கு தடை விதித்து தீர்ப்பளித்த பெஞ்சில் இடம் பெற்றிருந்த மூத்த நீதிபதி பி.என்.அகர்வால் குறித்து விமர்சித்தும், நீதிபதியின் மதிப்பைக் குறைக்கும் வகையிலும் கி.வீரமணி பேசியுள்ளார்.
மேலும், ராமர் பாலம் தொடர்பான வழக்கை பி.என்.அகர்வால் விசாரிக்கக் கூடாது என்றும் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளார். இது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். எனவே கி.வீரமணி மீது உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளேன்.
சேது சமுத்திரத் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இத்திட்டத்தால் நமது நாட்டுக்கு ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி பணம் தேவையில்லாமல் செலவாகும் என்று கூறினார் சுவாமி.












Click it and Unblock the Notifications