'கருமமே கண்': கருணாநிதிக்கு வைகோ அறிவுரை
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதில் தமிழக அரசு கருமமே கண்ணாக செயலாற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் குறித்து, முதலமைச்சர் கருணாநிதிக்கு சில கேள்விகளை விடுத்து, என் குற்றச்சாட்டை அவர் மறுத்து நிரூபித்தால், நான் பொதுவாழ்விலிருந்து விலகுகிறேன் என்று கடந்த செப்.30ம் தேதி சென்னையில் நான் பேசியதற்கு முதல்வர் கருணாநிதி என் குற்றச்சாட்டை மறுக்க முடியாமல் சாமர்த்தியமாக திசைதிருப்பி ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.
2001, பிப்ரவரி 1ம் தேதி சென்னை, எண்ணூர் துறைமுகத்தை, பிரதமர் வாஜ்பாய் தொடங்கி வைத்த விழாவில், பங்கேற்று பேசிய அன்றைய முதல்வர் தனது உரையில் துறைமுகங்களைப் பற்றி பேசுகையில், சேது சமுத்திரத் திட்டத்தைப்பற்றி வலியுறுத்தவும் இல்லை. அதுபற்றிக் குறிப்பிடவும் இல்லை.
கருணாநிதி தன் கடமையை மறந்தாலும், சேதுக் கால்வாய் திட்டத்தை அங்கே நினைவுறுத்தத் தவறினாலும், பிரதமர் வாஜ்பாய் தன்னுடைய உரையில் தமிழக மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்துவரும் சேது சமுத்திரத் திட்த்தை நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்தோம். அந்த உறுதியை நாங்கள் மறக்கவி்லலை. நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று குறிப்பிட்டார்.
சேதுக்கால்வாய் திட்டம் எப்படியும் நிறைவேற்றப்பட்டே ஆக வேண்டும். எந்தவொரு மதத்தினரின் மனதையும் புண்படுத்திப் பேசாமல், கருமமே கண்ணாகச் செயலாற்றுவது தான் இந்த தருணத்தில் முக்கியமான ஒன்றாகும்.
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு, இத்திட்டம் குறித்து மாற்று வழியைப் பரிசீலிப்பதாக சொல்லி, மூன்று மாத காலம் அவகாசம் பெற்றிருக்கிறது. மாற்று வழி என்ற யோசனையையும் புறக்கணிக்கவில்லை என்று ஒரு கட்டத்தில் தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் கூறினார்.
அமைக்கப்படுகின்ற சேதுக் கால்வாய், 14 மீட்டர் முதல் 15 மீட்டர் ஆழத்துக்கு குறையாமல் அமைந்தால் தான், பெரிய கப்பல்கள் அந்த கால்வாயில் செல்லமுடியும். ஆனால் தற்போது அமைக்கப்படுகின்ற சேது சமுத்திரக் கால்வாய், 10 மீட்டர் முதல் 12 மீட்டர் வரைதான் ஆழப்படுத்துவதாகத் தெரியவருகிறது.
அப்படியானால் 80 ஆயிரம் டன் முதல் 1 லட்சம் டன் எடையுள்ள கப்பல்கள் மற்றும் பன்னாட்டுக் கப்பல்கள் இந்தக் கால்வாய் வழியாகச் செல்லவே முடியாது. அதற்கு மாறாக 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையுள்ள சிறிய கப்பல்கள் மட்டுமே இந்த கால்வாயில் செல்ல முடியும் என்பதால் எந்த நோக்கத்துக்காக சேதுக் கால்வாய்த் திட்டம் அமைக்கப்படுகிறதோ, அந்த நோக்கமே நிறைவேறாமல் போய்விடும்.
மீனவ மக்களின் கவலையையும், அச்சத்தையும் போக்கிடும் வகையில் தகுந்த விளக்கங்களைத் தருவதுடன், பெரியகப்பல்கள் செல்லுகின்ற விதத்தில், சேதுக்கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றி தமிழகத்தின் பொருளாதாரத்துக்கு வளம் சேர்க்க வழி காண வேண்டும் என்று வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
புதிய சட்டம்-வைகோ எதிர்ப்பு:
வைகோ வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில் உள்ளாட்சி அமைப்புகளில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கை விவரம்:
உள்ளாட்சித் துறை நிர்வாகத்தில் மாநகராட்சிகள், நகராட்சி கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டம் ஜனநாயக கோட்பாடையே சிதைக்கின்ற எதேச்சையான அதிகார சட்டமாகும்.
மத்திய, மாநில அரசுகளை அகற்றுவதற்கு நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவையிலும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு மொத்த உறுப்பினர்களில் வாக்கு அளிக்கின்றவர்களுள் 50 சதவீதத்திற்கு மேல் ஒரு வாக்கு கூடுதலாக இருந்தாலும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற முடியும். அந்த ஆட்சியை அகற்ற முடியும்.
ஆனால் உள்ளாட்சித் துறையில் தற்போது தமிழக அரசு கொண்டு வந்திருக்கின்ற அவசரச் சட்டம் ஜனநாயகத்தின் ஆணிவேரையே வெட்டி எறிகின்ற விபரீதமான பாசிச சட்டமாகும்.
புதிய அவசரச் சட்டத்தின்படி மாநகராட்சி, நகராட்சி சட்டங்களில் துணைப் பிரிவுகள் திருத்தப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்டுள்ள மொத்த உறுப்பினர்களுள் 50 சதவீதத்துக்கு குறையாத உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரலாம் என்ற துணைப் பிரிவு மாற்றப்பட்டு இனிமேல் 60 சதவீதத்துக்கும் குறையாத உறுப்பினர்கள்தான் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரமுடியும் என்று திருத்தப்பட்டிருக்கிறது.
இதைப் போன்று மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில், இரண்டில் ஒரு பங்குக்கு குறைவு இல்லாத என்று உள்ள சொற்றொடர் ஐந்தில் மூன்று பங்குக்குக் குறைவு இல்லாத என்று மாற்றப்பட்டுள்ளது.
நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான துணைப்பிரிவில் மொத்த உறுப்பினர்களுள் 60 சதவீதத்துக்கும் குறைவு இல்லாத என்பதை மாற்றி 80 சதவீதத்துக்கும் குறைவு இல்லாத என்று திருத்தப்பட்டுள்ளது.
தற்போது பல இடங்களில் ஆளுங்கட்சியைச் சார்ந்த உள்ளாட்சித் தலைவர்களின் அராஜகங்களும், ஊழலும் கண்டு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பதால் அவர்களின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.
அந்த ஜனநாயகப் பாதையை அடைத்துவிட்டு ஆளுங்கட்சியினர் உள்ளாட்சி அமைப்புகளை சீர்குலைத்து நாசம் ஆக்குவதற்கு துணை புரிவதற்காகவே இந்த அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே இந்த அவசரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications