மதுரையில் சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கை மீனவர் குடும்பத்துக்கு அரசு நிதியுதவி
சென்னை:
மதுரை சிறை வாசலில் சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கை மீனவர் சங்கத் தலைவர் வர்ணகுல சூர்ய கனிசியஸ் பெர்னாண்டோவின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 1 லட்சம் நிவாரண உதவியை அறிவித்துள்ளது.
மதுரையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த நான்கு மீனவர்களைப் பார்ப்பதற்காக பெர்னாண்டோ மதுரைக்கு வந்திருந்தார்.
சிறைக்குள் அவர் தடை செய்யப்பட்ட பகுதி வழியாக நுழைய முயன்றபோது அவருக்கும், சிறைக் காவலர் தேவராஜனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து பெர்னாண்டோவை, தேவராஜன் தனது துப்பாக்கியால் சுட்டு விட்டார். இதில் பெர்னாண்டோ சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை மற்றும் நீதி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், பெர்னாண்டோவின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 1 லட்சம் நிதியுதவியை அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் கருணாநிதி பிறப்பித்துள்ளதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.