'கொடநாடு': அமைச்சர் தலைமையில் திமுக போராட்டம்- அதிமுகவினர் குவிந்ததால் பதற்றம்
கொடநாடு:
கொடநாடு எஸ்டேட்டின் மெயின் கேட் விவகாரத்தில் போராட்டம் நடத்த சென்ற திமுகவினருக்கு எதிராக அதிமுகவினரும் கூடியதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ளது கொடநாடு எஸ்டேட். இதை சமீபத்தில் ஜெ-சசிகலா ஆகியோர் வாங்கினர்.
இந்த எஸ்டேட் அருகே வசிக்கும் மக்கள் கொடநாடு எஸ்டேட்டின் வழியாக உள்ள மெயின்கேட் வழியாக சென்று வந்தனர். ஆனால் திடீரென்று எஸ்டேட் நிர்வாகம் அப்பகுதி மக்களை மெயின்கேட் வழியாக செல்லக்கூடாது என்று கூறி அந்த பாதையை மூடிவிட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிற்கு செல்ல சிரமப்பட்டு வருகிறார்கள்.
இந்த மெயின்கேட் மூடப்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டள்ளனர். எனவே அந்த கேட்டை திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று கோரி கொடநாடு பஞ்சாயத்துத் தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
இந்த பிரச்சனை தொடர்பாக விசாரணை நடத்திய குன்னூர் ஆர்டிஓ, கேட்டை உடைத்து பொதுமக்களின் உபயோகத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால் அவருடைய இந்த உத்தரவுக்கு கொடநாடு எஸ்டேட் நிர்வாகம் இடைக்காலத் தடை வாங்கியது. அந்தத் தடை உத்தரவு காலாவதியாகிவிட்டது.
இந்நிலையில் கேட்டை திறக்கக் கோரி தமிழக கதர் வாரியத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் இன்று காலை முதல் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திமுகவினர் குவிந்தனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் கொடநாடு எஸ்டேட் கேட் வரை ஊர்வலமாக சென்று எஸ்டேட் கேட்டை திறக்கச் சொல்லி கோஷம் எழுப்பினர்.
இதற்கிடையில் திமுகவின் இந்தப் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுகவினரும் இன்று காலையில் கொடநாடு எஸ்டேட் முன்பு குவிந்தனர்.
இதனால் கொடநாடு எஸ்டேட் பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டது. இரு கட்சி தொண்டர்களும் குவிந்ததால் அமைதியை கட்டிக் காக்க போலீசார் பெரும்பாடுபட்டனர்.
அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க மாவட்ட எஸ்பி வித்யா குல்கர்னி தலைமையில் அப் பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications