தமிழக மீனவர் இறந்த வழக்கு: மங்களூர் போலீசிடம் ஒப்படைக்க முடிவு
குளச்சல்:
குளச்சலை சேர்ந்த மீனவர் ஜார்ஜ் பிச்சை மங்களூரில் மர்மமான முறையில் இறந்த வழக்கை மங்களூர் போலீசாரிடம் ஒப்படைக்க கன்னியாகுமரி மாவட்ட போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கோடிமுனை மீனவர் கிராமத்தை சேர்ந்த ஜார்ஜ் பிச்சை கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி மர்மமான முறையில் இறந்தார்.
இதைத் தொடர்ந்து தனது கணவர் சாவில் மர்மம் இருப்பதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரது மனைவி அருள்மேரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் நீதிபதி உத்தரவி்ன் பேரில் ஆகஸ்ட் 8ம் தேதி ஜார்ஜ் பிச்சையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அந்த பரிசோதனையில் ஜார்ஜ் பிச்சை உடலில் வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவரது மரணம் விஷம் குடித்ததால் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து இதற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி அருள்மேரி நாகர்கோவிலில் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். பின் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதால் உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையை தொடங்க தக்கலை ஏ.எஸ்.பி உத்தரவின் பேரில் போலீசார் கடந்த 3ம் தேதி மங்களூர் சென்றனர். அங்கு விசாரணையை முடித்த கொண்டு போலீசார் குளச்சல் திரும்பினார்கள்.
அங்கு ஜார்ஜ் பிச்சையின் மரணம் குறித்து துப்பு எதுவும் கிடைக்காத நிலையில் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை மங்களூர் போலீசில் ஒப்படைக்க குமரி மாவட்ட போலீஸ் முடிவு செய்துள்ளது.