மூட நம்பிக்கைக்குப் பலியான 2 சிறுமிகள்
மதுரை:
வைரஸ் காய்ச்சலுக்கு சரியான சிகிச்சை அளிக்காமல், அம்மை வந்திருப்பதாக கருதி, டாக்டர்களிடம் சிகிச்சை அளிக்காமலும், சிகிச்சை அளிக்க வந்த டாக்டர்களை அதற்கு அனுமதிக்காமலும், மூட நம்பிக்கையால் 2 சிறுமிகளை பறி கொடுத்துள்ளனர் மதுரை அருகே உள்ள இரு கிராம மக்கள்.
மதுரை மாவட்டம் பெரிய ஆலங்குளம் மற்றும் ஒத்தை ஆலங்குளம் கிராமங்களில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. சாதாரணமாக இருந்த இந்த காய்ச்சல் இப்போது வெகு வேகமாக இரு கிராமங்களிலும் பரவி விட்டது.
இந்தக் காய்ச்சல் முதலில் சிறுவர், சிறுமிகளுக்குத்தான் வந்தது. ஆனால், அதை அம்மை என்று நினைத்த கிராமத்தினர், டாக்டர்களிடம் கொண்டு போய் சிகிச்சை அளிக்காமல் வீட்டிலேயே தங்களது குழந்தைகளை வைத்திருந்தனர்.
மேலும், காய்ச்சல் பரவியிருப்பதை அறிந்து சிகிச்சை அளிக்க உள்ளூர் அரசு சுகாதாரத் துறை டாக்டர்கள் மற்றும் ஊழியர்களையும் ஊருக்குள் அனுமதிக்க மறுத்து விட்டனர்.
இதை விட கொடுமையாக உள்ளூரைச் சேர்ந்த கருப்பாயி என்ற சாமியாடி பெண்ணை வரவழைத்து அவரிடம் குறி கேட்டுள்ளனர். அந்தப் பெண், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு விபூதி பூசியும், வேப்பிலையால் அடித்தும் சிகிச்சை கொடுத்துள்ளார்.
இதனால் ஓரிருவருக்கு மட்டும் வந்த காய்ச்சல் இப்போது ஊர் பூராவும் பரவி விட்டது.
காய்ச்சல் வேகமாக பரவி, தற்போது எட்டு வயது வீரலட்சுமி, 4 வயது ரஞ்சனி ஆகியோரின் உயிர்களைப் பறித்துள்ளது. இரு கிராம மக்களும் காய்ச்சல் வந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்காமலும், அவர்களை மற்றவர்களுடன் சேராமல் தனித்து வைக்காமல் விட்டதால்தான் ஊர் பூராவும் காய்ச்சல் பரவி விட்டதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த இரு கிராமங்களையும் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் சாதாரண கூலித் தொழிலாளர்கள். உடம்புக்கு ஏதாவது வந்தால் டாக்டர்களிடம் போகும் பழக்கம் இவர்களிடம் இல்லை. சாமியாடியை வரவழைத்து அவரிடம் குறி கேட்டு அவர் சொல்கிறபடிதான் நடப்பது வழக்கமாம்.
சாமியாடி கருப்பாயிதான், குழந்தைகளுக்கு அம்மைதான் வந்துள்ளது. இதற்கு டாக்டர்களிடம் சிகிச்சை பெறக் கூடாது என்று தடை போட்டு விட்டாராம். இதனால்தான் குழந்தைகள் இருவரின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் பறி கொடுத்துள்ளனர் அந்த அப்பாவி கிராமத்தினர்.
தற்போது இரு கிராமங்களிலும் காய்ச்சல் வேகமாக பரவியுள்ளதால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலிருந்து ஒரு டாக்டர் குழுவை மாவட்ட நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது.
இதுகுறித்து ஆட்சித் தலைவர் ஜவஹர் கூறுகையில், இரு கிராமங்களிலும் காய்ச்சல் பரவியுள்ளது. பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிலர் சிகிச்சைக்குப் பின்னர் தேறியுள்ளனர். டாக்டர்கள் குழு அந்தக் கிராமங்களிலேயே தங்கி சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
தற்போது இரு கிராமங்களிலும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.