தேசிய கிரிக்கெட் அகாடமி இயக்குநர் வாட்மோர்
மும்பை:
இந்திய கிரிக்கெட் வாரியத்தின், தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநராக பணியாற்ற ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவ் வாட்மோர் சம்மதம் தெரிவித்துள்ளதாக, அகாடமியின் தலைவர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு தேசிய கிரிக்கெட் அகாடமி செயல்பட்டு வருகிறது. இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
அகாடமியின் தலைவராக கபில்தேவ் இருந்து வந்தார். இந்த நிலையில் ஜீ டிவி ஆரம்பித்த இந்திய கிரிக்கெட் லீக்குக்கு அவர் போய் விட்டதால் அகாடமி தலைவர் பதவியிலிருந்து கிரிக்கெட் வாரியம் நீக்கியது.
சமீபத்தில்தான் தலைவர் பொறுப்புக்கு ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அகாடமியின் இயக்குநர் பொறுப்புக்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வாட்மோரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டது.
இதுகுறித்து வாட்மோரிடம் பேசி அவரது ஒப்புதலை வாங்கும் பொறுப்பு ரவி சாஸ்திரியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரும் வாட்மோரிடம் பேசி தற்போது அவரது ஒப்புதலைப் பெற்றுள்ளார்.
வாட்மோர் ஆஸ்திரேலியர் ஆனாலும் கூட அவர் பிறந்தது இலங்கையில். இலங்கை அணி 1996ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றபோது வாட்மோர்தான் அந்த அணியின் பயிற்சியாளராக இருந்தார். இலங்கை அணியை தூக்கி நிறுத்தியவர் வாட்மோர். அவரது பயிற்சி முறை வெகு பிரசித்தி பெற்றது.
இலங்கை அணியின் பயிற்சியாளர் பதவியை முடித்துக் கொண்டு வங்கதேச பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார் வாட்மோர். அவரை இந்திய அணியின் பயிற்சியாளராக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முயற்சித்தது. ஆனால் இந்திய அணியில் உள்ள மூத்த வீரர்கள் சிலர் யார் பேச்சையும் கேட்பதில்லை என்பதை கொள்கையாகவே வைத்துள்ளதால், பயிற்சியாளராக அதிக ஆர்வம் காட்டவில்லை வாட்மோர்.
இந்த நிலையில்தான் தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநராக பொறுப்பேற்கவுள்ளார் வாட்மோர். அவரை படிப்படியாக இந்திய அணியின் பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் வாரியம் நியமிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்மோர், இங்கிலாந்தின் லாங்ஷயர் அணிக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார். அப்போது அந்த அணி 1998 மற்றும் 1999ல் தொடர்ந்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications