சேது கால்வாயில் அத்துமீறி நுழைந்த கப்பல்
ராமேஸ்வரம்:
சேதுக் கால்வாய் பணிகள் நடக்கும் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த கப்பலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவாவில் இருந்து பாம்பன் பாலம் வழியாக ஆந்திராவின் கிருஷ்ணபட்டினம் துறைமுகத்திற்கு எம்.பி.கரன் அர்ஜூன் என்ற கப்பல் சென்றது.
இந்தக் கப்பல் பாம்பன் பாலம் வழியாக செல்வதற்கு முன் அனுமதி பெற்றிருந்ததால், துறைமுக அதிகாரிகள் கப்பல் செல்வதற்கு பாம்பன் பாலத்தை திறந்து விட்டனர்.
ஆனால் இந்தக் கப்பல் பாம்பன் வழியாக செல்லாமல் வேறு வழியாக சென்றுவிட்டது. பாம்பன் பாலத்தை திறந்து வைத்து காத்திருந்த துறைமுக அதிகாரிகள் மிதவைக் கப்பல் வராதது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனே துறைமுக அதிகாரிகள் கப்பலை கண்டுபிடிக்க கடலோர காவல்படையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் தேடுதல் பணியில் இறங்கியபோது, தடை செய்யப்பட்ட சேதுக் கால்வாய் பகுதியில் வந்து கொண்டிருந்த அந்த கப்பலை மடக்கி பிடித்தனர்.
பின்னர் அந்த கப்பல் துறைமுக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையில், பாம்பன் பாலத்தை கடந்து செல்லும் அனைத்துக் கப்பல்களும் துறைமுகத்திற்கு சுங்கவரி செலுத்த வேண்டும். அதனால் இந்த கப்பலை சேதுக் கால்வாய் வழியாக செலுத்தியதாக மாலுமி கூறியுள்ளார்.
சேது கால்வாய் பணிகள் நடந்து வருவதால் அதன் வழியே கப்பல்கள் செல்ல தடை உள்ள நிலையில் அதை மீறி இந்தக் கப்பல் நுழைந்துள்ளது.
இதையடுத்து கப்பல்கள் மற்றும் படகுகள் அத்துமீறி நுழைவதை தடுக்க கடலோர கண்காணிப்பு படையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications