செக் மோசடி-தூத்துக்குடி நர்சுக்கு ஓராண்டு ஜெயில்
தூத்துக்குடி:
செக் மோசடி வழக்கில் அரசு மருத்துவமனை நர்சுக்கு ஒராண்டு சிறை தண்டனையும் ரூ.1.5 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
தூத்துக்குடி ஆரோக்கியபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஆல்பர்ட். இவரது மனைவி ஜோதி. தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். கடந்த 2002ம் ஆண்டு ஆல்பர்ட் வீடு கட்டுவதற்காக தூத்துக்குடியை சேர்ந்த ஜோதிநாதன் என்பவரிடம் ரூ. 2.5 லட்சம் கடனாக பெற்றுள்ளார்.
மேலும் அதனை ஒரு மாதத்தில் திருப்பி கொடுத்து விடுவதாக கூறி கடன் தொக்கைக்காக தனது மனைவி ஜோதி பெயரிலான வங்கி கணக்கு காசோலையை ஜோதிநாதனிடம் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர் கடந்த 24-09-2002 அன்று காசோலையை வங்கியில் போட்டார். ஆனால் அது பணமில்லாமல் திரும்பி வந்து விட்டது.
அதன்பிறகு ஜோதிநாதன் அதே காசோலையை மீண்டும் 8-11-2002ல் வசூலுக்காக போட்ட போதும் கணக்கில் பணம் இல்லையென்று திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜோதிநாதன் தூத்துக்குடி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) வீ.தனியரசு விசாரித்து ஜோதிக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், ஓன்றரை லட்ச ரூபாய் அபராதமும் விதித்தார்.