திருமா. மீது அவமதிப்பு வழக்கு
திருச்சி:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர பாரதி ஜனசக்தி கட்சி தீர்மானித்துள்ளது.
உமாபாரதியின் பாரதிய ஜனசக்தியின் மாநில கலந்தாய்வுக் கூட்டம் திருச்சியில் நடந்தது. தேசியக் குழு உறுப்பினர் சுதாகர் திவேதி தலைமை தாங்கினார்.
கூட்டத்திற்குப் பின்னர் மாநில பொதுச் செயலாளர் குகன்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், ராமரை விமர்சம் செய்த மத்திய மாநில அரசுகள் நீடிக்காது. எங்கள் தலைவி உமாபாரதி தான் முதன் முதலில் ராமர் பாலத்துக்காக தமிழகம் வந்து போராடினார்.
அதன் பின்பு தான் பிஜேபி, விஎச்பி போன்றவை போராட்டத்தில் குதித்தன. ராமர் பற்றி கருணாநிதி அபத்தமாக பேசுகிறார். இது வன்மையாக கண்டிக்கதக்கது.
உச்சநீதி மன்றத்தில் ராமர் பாலம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள போது வன்முறையை தூண்டி விடும் வகையில் பேசும் திருமாவளவன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம் என்றார்.