பெண்ணைக் கொன்று நகைகள் கொள்ளை
மதுரை:
மதுரை புறநகரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கொன்று அவர் அணிந்திருந்த 12 பவுன் தங்க நகைகளை சிலர் திருடிச் சென்றனர்.
மதுரை புறநகரான மயில் நகர் பகுதியில் வசித்து வந்தவர் சசிகலா (20). இவரது கணவர் நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பினார். அப்போது வீடு உட்புறமாக பூட்டியிருந்தது.
நீண்ட நேரமாக கதவைத் தட்டிப் பார்த்த சசிகலாவின் கணவர் தன்னிடமிருந்த இன்னொரு சாவியால் வீட்டைத் திறந்து உள்ளே போனார். அப்போது அவரது மனைவி சசிகலா ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
கை, கால்களைக் கட்டி அவரது கழுத்தை நெரித்து கொலையாளிகள் சசிகலாவைக் கொன்றுள்ளனர். அவரது தலையிலிருந்தும் உடலின் பிற பகுதிகளிலிருந்தும் ரத்தம் வெளியேறி உறைந்திருந்தது.
உடனடியாக போலீஸாருக்குத் தகவல் சென்றது. போலீஸார் மோப்ப நாய்கள், கைரேகை நிபுணர்களுடன் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications