'கிட்னி': 3 மருத்துவமனைகளின் உரிமம் ரத்து
சென்னை:
சிறுநீரகத் திருட்டு தொடர்பாக சென்னையில் உள்ள 3 மருத்துவமனைகளின் உரிமங்களை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த டாக்டர் பழனி ரவிச்சந்திரன் என்பவர் சமீபத்தில் மும்பையில் கைது செய்யப்பட்டார். நூற்றுக்கணக்கானோரிடம் சிறுநீரகங்களைத் திருடி கோடிக்கணக்கில் சம்பாதித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
டாக்டர் பழனி ரவிச்சந்திரன் சென்னையில் உள்ள பாரதிராஜா மருத்துவமனை, நியூ பாரதிராஜா மருத்துவமனை மற்றும் செயின்ட் தாமஸ் மருத்துவமனை ஆகியவற்றைப் பயன்படுத்தி தனது சிறுநீரக திருட்டு மோசடியை செய்ததாக மும்பை போலீஸார் கூறியுள்ளனர்.
ஆனால் இதை சம்பந்தப்பட்ட 3 மருத்துவமனைகளும் மறுத்துள்ளன. இந்த நிலையில் சர்ச்சையில் சிக்கியுள்ள இந்த மூன்று மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்ட உரிமத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
பாரதிராஜா மருத்துவமனை தி.நகர் மேட்லி சாலையில் உள்ளது. அதே மருத்துவமனையின் அதி நவீன பிரிவான நியூ பாரதிராஜா மருத்துவமனை ஜி.என்.செட்டி சாலையில் உள்ளது. இந்த இரு மருத்துவமனைகளிலும் தமிழக அரசின் மருத்துவப் பணிகளுக்கான இயக்குநர் டாக்டர் பாபா பக்ருதீன், உதவி இயக்குநர் சரோஜினி, கண்காணிப்பாளர் காமேஸ்வரன் ஆகியோர் விஜயம் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதேபோல செயின்ட் தாமஸ் மருத்துவமனையிலும் இந்த அதிகாரிகள் குழு சோதனை நடத்தியது. இந்த சோதனைகளைத் தொடர்ந்து தற்போது உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications