ஜெ. சதி வெற்றி பெறாது - டி.ஆர்.பாலு
சென்னை:
சேது சமுத்திர திட்டம் நிறைவேறாது என்று ஜெயலலிதா கூறியிருப்பது, தான் திருடி பிறரை நம்பார் என்பார்களே, அதைப் போல் உள்ளது என்று மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சேது சமுத்திரத் திட்டம் முடிந்து போன கதை. இனி தொடர்வதற்கே வாய்ப்பில்லை என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். கருணாநிதியின் மற்ற திட்டங்கள் என்ன ஆனதோ அதுபோலத்தான் சேது சமுத்திரத் திட்டமும் ஆகும் என்கிறார் ஜெயலலிதா.
கருணாநிதியின் திட்டங்களுக்கு எல்லாம் மூடுவிழா நடத்தியவர் ஜெயலலிதாதான். மீண்டும் கருணாநிதி பொறுப்பேற்ற பிறகு, ஜெயலலிதாவால் மூடுவிழா நடத்தப்பட்ட உழவர் சந்தை உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தினார்.
அதைப் போலவே சேது சமுத்திரத் திட்டமும் நிச்சயமாக நிறைவேறும். அது நடைபெறக் கூடாது என்று ஜெயலலிதா போன்றவர்கள் எத்தனை அறிக்கை விட்டாலும், சதி செய்தாலும் அதிலே வெற்றி கிடைக்காது.
சேது சமுத்திரத் திட்டம் லாபகரமாக இருக்குமா என்றெல்லாம் பார்க்காமல், சொந்த லாபத்தை மட்டுமே கணக்கிட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதா சொல்லியிருக்கிறார்.
தான் திருடி பிறரை நம்பாள் என்று சொல்வார்களே, அதே போன்று தன்னைப் போலத்தான் அனைவரும் இருப்பார்கள் என்ற எண்ணத்துடன் அப்படி சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா.
இந்த திட்டத்தை ஒத்தி வைக்கிறோம் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசே முன்வந்து வாக்குறுதி அளித்திருப்பதாகவும், ஜெயலலிதா திரும்ப திரும்பச் சொல்லி வருகிறார். மத்திய அரசு இந்த திட்டத்தை அப்படியே ஒத்தி வைப்பதாக எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை. சேது திட்டத்தில் பிரச்சனைக்குரிய ஆடம்ஸ் பாலம் பகுதியிலே மட்டும் திட்டத்தை ஒரு சில மாதங்களுக்கு ஒத்தி வைக்கலாம் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.
சேது சமுத்திரத் திட்டப் பணிகள் எந்தளவுக்கு நிறைவேறியுள்ளது என்று சொல்லத் தயாரா என்றும் ஜெயலலிதா கேட்டுள்ளார். திட்ட வரைவில் குறிப்பிட்டுள்ளபடி, மொத்தம் 89 கிலோ மீட்டர் நீளத்துக்கும், 12 மீட்டர் ஆழத்துக்கும் அகழ்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இதில், இதுவரை 54 கிலோ மீட்டர் நீளத்துக்கும், 9 மீட்டர் ஆழத்துக்கும் அகழ்வு பணிகள் நடந்துள்ளன. மேலும் 1.5 லட்சம் டன் கொள்ளளவு கப்பல்கள் இந்த வழியாகச் செல்ல முடியாது என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
உலகில் மொத்தம் 9,147 கப்பல்கள் கடலில் பயணிக்கின்றன. அவற்றில் 1.5 லட்சம் கொள்ளளவுக்கு மிகுதியான கப்பல்களின் எண்ணிக்கை 1,367 மட்டுமே. அவற்றில் இந்திய துறைமுகங்களுக்கு வந்து போகிற கப்பலகளின் எண்ணிக்கை 2.4 சதவீதம் மட்டும் ஆகும்.
1.5 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட பெரிய கப்பல்கள், உலகில் உள்ள எல்லா துறைமுகங்களுக்கும் செல்வது போலவும், சேது கால்வாய் வழியாக மட்டும்தான் செல்ல முடியாது என்பது போலவும் ஜெயலலிதா பிதற்றுகிறார்.
அது போன்ற பெரிய கப்பல்கள் உலகில் உள்ள ஒரு சில துறைமுகங்களுக்கு மட்டுமே செல்ல முடியும். இந்தியாவிலே உள்ள மொத்த துறைமுகங்கள் 199 (12 பெரிய துறைமுகங்கள், 185 சிறிய துறைமுகங்கள்). இதில் 1.5 லட்சம் டன் கொள்ளளவு உள்ள கப்பல்கள் செல்லக்கூடிய அளவுக்கு உள்ள துறைமுகங்கள் 4 மட்டுமே.
அவை, சென்னை, விசாகப்பட்டினம், ஜாம்நகரில் உள்ள வாடினார் மற்றும் ஹஸ்தியா துறைமுகங்கள் ஆகும்.
சேது சமுத்திரத் திட்டம் தொடர்ந்து நடைபெற்று வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு, முடிந்திடும் நாட்கள் விரைவில் நெருங்குகிறது என்பதை அறிந்த பிறகு, தமிழ்நாட்டு மக்களால் ஓரங்கப்பட்ட ஜெயலலிதா, கட்டுக்கடங்காத காழ்புண்ர்ச்சியால் கோபம் கொப்பளிக்க தினந்தோறும் புதிய புலம்பல்களை கட்டவிழ்த்து விடுகிறார். மக்கள் இவரின் புலம்பல்களை நம்பத் தயாராக இல்லை என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.