பெனாசிர் வங்கிக் கணக்கு முடக்கம் நீக்கம்
இஸ்லாமாபாத்:
முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க முஷாரப் உத்தரவிட்டுள்ளார்.
முஷாரப் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்து அதிபரானதும், பெனாசிர் பூட்டோ நாட்டை விட்டு வெளியேறினார். அவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் போடப்பட்டன. ஏற்கனவே நவாஸ் ஷெரீப் காலத்திலும் அவர் மீது பல ஊழல் வழக்குகள் போடப்பட்டிருந்தன.
சமீபத்தில் முஷாரப்புக்கும், பெனாசிருக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து பெனாசிர் மீதான ஊழல் வழக்குகளை தள்ளுபடி செய்ய முஷாரப் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தற்போது பெனாசிர் மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளை முடக்கி வைத்திருக்கும் உத்தரவையும் நீக்க முஷாரப் உத்தரவிட்டுள்ளாராம். விரைவில் அந்நாட்டு தலைமை வங்கியின் தலைவருக்கு இதுதொடர்பாக உத்தரவு அனுப்பப்படவுள்ளது.
'லேட்'டாக வர மீண்டும் முஷாரப் கோரிக்கை:
இதற்கிடையே, பாகிஸ்தான் திரும்பும் திட்டத்தை பெனாசிர் தள்ளி வைக்க வேண்டும் என்று அதிபர் முஷாரப் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பெனாசிர் பூட்டோ தனது வருகையை சற்று தாமதமாக்க வேண்டும் என்று மீண்டும் அவருக்கு செய்தி அனுப்பியுள்ளேன்.
அவர் தனது வருகையை தாமதப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறேன். அவர் அதை ஏற்காவிட்டால் தடுக்க முயற்சிப்பேனா என்று கேட்கக் கூடாது. இதுவரை அவரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்றார் முஷாரப்.
சில நாட்களுக்கு முன்புதான் பெனாசிர் தாமதமாக வர வேண்டும் என்று முஷாரப் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அதை பெனாசிர் தரப்பு நிராகரித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற 18ம் தேதி பெனாசிர் பூட்டோ பாகிஸ்தான் திரும்பவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்குகளை வாபஸ் பெற தடை:
இதற்கிடையே, பெனாசிர் பூட்டோ மீதான வழக்குகளை திரும்பப் பெற முஷாரப் அரசு திரும்பப் பெற முடிவு செய்துள்ளதற்கு, பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அவசர சட்டம் மூலம் பெனாசிர் மற்றும் இதர தலைவர்கள் மீதான ஊழல் வழக்குகள் திரும்ப பெறப்பட்டதை எதிர்த்து அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் சில கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக மறு உத்தரவு வரும் வரை பெனாசிர் மற்றும் இதர தலைவர்கள் மீதான ஊழல் வழக்குகளை திரும்ப பெறக் கூடாது என்று கூறியதுடன், அந்த அவசர சட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications