காங். தலைவர்களுக்கு 'அட்டென்டன்ஸ்'
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் புதிதாதக வருகைப் பதிவேடு வைக்கப்படவுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் இனிமேல் அங்கு வந்து தினசரி கையெழுத்திட வேண்டும். அதேபோல காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சென்னைக்கு வந்தால் தவறாமல் சத்தியமூர்த்தி பவனுக்கு வர வேண்டும் என
காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் அருண்குமார் அறிவித்துள்ளார்.
தமிழ காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அருண்குமார் நேற்று முதல் முறையாக சென்னைக்கு வந்தார். கட்சி அலுவலகத்திற்கு வரும்போது ஆர்ப்பாட்டமாக வரவேற்கக் கூடாது என்று அவர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். மேலும் விமான நிலையத்திற்கும் யாரும் வரக் கூடாது என்றும் கூறியிருந்தார்.
இதை விட வித்தியாசமாக சென்னைக்கு வந்த அவர் நேராக தனது உறவினர் வீட்டில் போய்த் தங்கினார். அங்கிருந்து டாக்சி ஒன்றைப் பிடித்து ஸ்ரீபெரும்புதூர் சென்றார். ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
அங்கு வந்திருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி அருண்குமாரை வரவேற்றார். வழியில், டாக்சியில் அருண்குமார் வருவதைப் பார்த்த கிருஷ்ணசாமி, தனது காரில் வருமாறு அழைத்தார். ஆனால் அதை நிராகரித்தார் அருண்குமார். வேண்டுமானால் என்னுடன் டாக்சியில் வாருங்கள் என்று கிருஷ்ணசாமியை அழைத்தார்.
நெளிந்து போன கிருஷ்ணசாமி, அருண்குமாருடன் டாக்சியில் ஏறி ராஜீவ் நினைவிடத்திற்குப் போனார். அங்கு அஞ்சலி செலுத்திய பின்னர் சத்தியமூர்த்தி பவனுக்கு அருண்குமார் வந்தார். வழியில் சில இடங்களில் அருண்குமாரை வரவேற்று போஸ்டர்கள், வரவேற்பு வளைவுகள் உள்ளிட்டவற்றை காங்கிரஸார் வைத்திருந்தனர்.
இது தனக்குப் பிடிக்கவில்லை என்று கிருஷ்ணசாமியிடம் அதிருப்தியுடன் கூறினார் அருண்குமார். அதேசமயம், அருண்குமார் ஏற்கனவே உத்தரவிட்டிருந்ததால், சத்தியமூர்த்தி பவனில் எந்தவித ஆடம்பரமும், ஆர்ப்பாட்டமும் இல்லை.
பின்னர் உள்ளே வந்த அவரை வாழ்த்தி ஒவ்வொரு கோஷ்டியினரும் கோஷம் போட்டனர். அவர்களைப்பார்த்து அப்படி கோஷம் போடக் கூடாது என்று அட்வைஸ் செய்த அருண்குமார், என்னை வாழ்த்திக் கோஷம் போடுவது இதுதான் கடைசியாக இருக்க வேண்டும் என்றார்.
பின்னர் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், ஜெயந்தி நடராஜன், ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, குமரி அனந்தன், சுதர்சனம் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும், பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பல்வேறு தலைவர்களும் பேசினர். கடைசியாக அருண்குமார் தலைவர்களிடம் தனித் தனியாக ஆலோசனை நடத்தினார். பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு தினசரி வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன். இது காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் மட்டுமல்ல, கோவிலும் கூட.
தலைவர்கள் தினசரி வந்து இங்கு வைக்கப்படும் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும் என கூறியுள்ளேன்.
அதேபோல காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சென்னையில் இருக்கும்போதும் அல்லது சென்னைக்கு வரும்போதும் தினசரி சத்தியமூர்த்தி பவனுக்கு வர வேண்டும்.
இதுவரை சில தலைவர்கள் கட்சி அலுவலகம் பக்கம் கூட வராமல் இருந்தனர். இனிமேல் அவர்கள் தவறாமல் வருவார்கள்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் நிலைமை சற்று சிக்கலாகத்தான் உள்ளது. இருந்தாலும் அதை சரி செய்து விடலாம். மிகவும் கவனமாக கையாண்டால் எதையும் சரி செய்ய முடியும்.
இங்குள்ள அனைத்துத் தலைவர்களையும் ஓரணியில் என்னால் திரட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அனைவரும் சேர்ந்து தங்களது கோரிக்கைகளை ஒருமித்த குரலில் கூறினால், சோனியாவைச் சந்திக்க நான் ஏற்பாடு செய்வேன்.
நான் அடிக்கடி சென்னைக்கு வர முயற்சிப்பேன். நான் கண்ணாடி போல. இங்கு உள்ளவற்றை கட்சி மேலிடத்தில் பிரதிபலிப்பேன்.
இப்போது தலைவர்களைச் சந்தித்துள்ளேன். அடுத்து தொண்டர்களையும் சந்திப்பேன். அவர்கள் நினைப்பதை, அவர்களது குறைகளை சோனியா காந்தியிடம் கூறி ஆவண செய்ய முயற்சிப்பேன் என்றார் அருண்குமார்.
இதற்கு முன்பு இருந்ததைப் போல இல்லாமல், இந்த முறை காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் வருகை படு வித்தியாசமாக இருந்தது. கிட்டத்தட்ட ஹெட்மாஸ்டர் போல ஸ்ட்ரிக்டாக நடந்து கொண்டார் அருண்குமார். இந் நிலை தொடர்ந்தால், அவர் நினைப்பது போல தலைவர்கள் கட்டுக்கோப்பாக செயல்பட ஆரம்பித்தால் நிச்சயம் காங்கிரஸ் கட்சி உண்மையிலேயே வலுவான கட்சியாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications