சர்க்கரை ஆலையில் தீ-ரூ.50 லட்சம் சேதம்
கடலூர்:
பெண்ணாடம் அருகேயுள்ள சர்க்கரை ஆலையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.
கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகேயுள்ளது இறையூர். இங்கு அம்பிகா சர்க்கரை ஆலை உள்ளது. இந்த சர்க்கரை ஆலையில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரையை பேக்கிங் செய்வதற்காக 45,000 மேற்பட்ட காலி சாக்குகள் ஒரு கிடங்கிலும், சர்க்கரை நிரப்பப்பட்ட மூட்டைகள் மற்றொரு கிடங்கிலும் வைக்கப்பட்டிருந்தன.
இந் நிலையில் சர்க்கரை ஆலையின் காலிச் சாக்குகள் இருந்த கிடங்கில் நேற்று மாலை திடீரென்று தீப்பிடித்தது. இந்த தீ சிறிது நேரத்திலேயே அருகிலிருந்த சர்க்கரை மூட்டைகள் வைக்கப்பட்டிருந்த கிடங்குக்கும் பரவியது.
இந்த தீ விபத்து குறித்து கடலூர் மற்றும் பெண்ணாடத்திலிருந்து 4 தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்புப் படை வீரர்கள் விடிய விடிய தீயை போராடி அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 45,000 காலி சாக்குப் பைகள், சர்க்கரை மூட்டைகள் மற்றும் சாக்கு தைக்கும் இயந்திரங்கள் ஆகியவை முற்றிலும் சேதமடைந்து விட்டன. இந்த தீ விபத்தில் சேதமடைந்த பொருட்களின் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.