கட்டப் பஞ்சாயத்து போலீசார்: கமிஷனர் 'வார்னிங்'
சென்னை:
புகார் கொடுக்க வருகிறவர்களிடம் கட்டப் பஞ்சாயத்து நடத்தும் இன்ஸ்பெக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் எச்சரித்துள்ளார்.
சென்னையை அடுத்துள்ள மதுராவயலில், லாரியை நிறுத்தி முறையான ஆவணங்கள் இருந்தும் கூட லாரி டிரைவரிடம் ரூ. 50,000 லஞ்சம் கேட்டு மிரட்டிய இன்ஸ்பெக்டர் சீதாராமன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை தற்போது சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
சீதாராமன் கட்டப் பஞ்சாயத்து நடத்தியதாகவும் புகார்கள் எழுந்தன. புகார் கொடுக்க வருகிறவர்களிடம் கட்டப் பஞ்சாயத்து நடத்தி பணம் பறிப்பது சீதாராமனின் முக்கிய வேலையாம். இந்த நிலையில்தான் லஞ்ச வழக்கில் அவர் கைதாகியுள்ளார்.
இந்த நிலையில், கட்டப் பஞ்சாயத்து செய்யும் இன்ஸ்பெக்டர்களை கண்காணிக்க காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். காவல் நிலையங்களில் புகார் கொடுக்க வருபவர்களிடத்தில் கட்டப் பஞ்சாயத்தில் ஆய்வாளர்கள் ஈடுபடக்கூடாது. புகார்களை முறைப்படி பதிவு செய்து அதன்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சிவில் பிரச்சனைகளில் தலையிடக்கூடாது. பெண்கள் கொடுக்கும் புகார்கள் மீது பெண் போலீசார் தான் விசாரணை நடத்த வேண்டும் என்று ஆணையரின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், சென்னை நகரில் உள்ள அனைத்து இன்ஸ்பெக்டர்களையும் கண்காணிக்க உளவுப்பிரிவு போலீசாருக்கு நாஞ்சில் குமரன் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் தற்போது சென்னையில் உள்ள 40 இன்ஸ்பெக்டர்கள் உளவுப்பிரிவு போலீசாரின் தீவிர கண்காணிப்பு பிடியில் இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications