கடித்துக் குதறிய நாய்கள் - சிறுமி படுகாயம்
கோயம்புத்தூர்:
கோவை அருகே 5 வயது சிறுமியை தெரு நாய்கள் கடித்து குதறின. உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார்.
சூலூர் அருகேயுள்ள காங்கேயம்பாளையத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவருக்கு நீலவேணி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் இருக்கிறார்கள். இவருடைய கடைசி மகளான தனலட்சுமி 1ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார் தனலட்சுமி. அவருடைய வீட்டிற்கு அருகில் குப்பைகள் கொட்டப்பட்டு கிடந்தது. இதில் அப்பகுதியில் கோழி இறைச்சி கடை வைத்திருப்பவர்கள், கோழி கழிவுகளை அந்த குப்பையில் கொட்டியுள்ளனர்.
இந்தக் கழிவுகளை தின்பதற்காக நாய்கள் கூட்டமாக குவிந்தன. அப்போது நாய்கள் ஒன்றோடு ஒன்று கடுமையாக மோதிக் கொண்டன.
வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் அருகே நாய்கள் பயங்கர சப்தத்துடன் சண்டை போட்டன. இதைப் பார்த்து பயந்து போன தனலட்சுமி அழுதுள்ளார். பின்னர் நாய்கள் அனைத்தும் தனலட்சுமி மீது பாய்ந்து கடித்துக் குதறின.
சிறுமியை நாய்கள் கடிப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் கம்பு, கட்டைகளை எடுத்து நாய்களை விரட்டியடித்தனர். ஆனால் அதற்குள்
படுகாயமடைந்திருந்தார் தனலட்சுமி.
அவரை அக்கம் பக்கத்தினர் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தனலட்சுமி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.