குண்டுவெடிப்பில் 6 பேர் பலி
லூதியானா:
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடந்த பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 6 பேர் பலியானார்கள்.
ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீரில் உள்ள புகழ் பெற்ற தர்ஹாவில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தின் பரபரப்பு ஓய்வதற்குள், பஞ்சாபில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், ரம்ஜான் பண்டிகை என்பதாலும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. குறிப்பாக அதிக அளவில் வணிக நிறுவனங்கள், தியேட்டர்கள் உள்ள சம்ராலா சாலையில் கூட்டம் அதிகம் இருந்தது.
இப்பகுதியில் உள்ள பிரபல திரையரங்க வளாகம் சிருங்கார் காம்ப்ளக்ஸ் ஆகும். இங்கு நேற்று மாலை முதல் காட்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது இரவு 9 மணியளவில் திடீரென தியேட்டருக்குள் குண்டுவெடித்தது.
இதையடுத்து தியேட்டருக்குள் பெரும் குழப்பம் காணப்பட்டது. படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர். குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தியேட்டரில் பெரும் பரபரப்பு நிலவியது. இருக்கைகள் சிதறி விட்டன. கண்ணாடி ஜன்னல்களும் உடைந்து விட்டன.
இறந்தவர்களில் ஒரு குழந்தையும் அடக்கம். படுகாயமடைந்தவர்கள் சிஎம்சி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து லூதியானா நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நகர எல்லைகள் மூடப்பட்டன. அதேபோல பஞ்சாப் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் லஷ்கர் இ தொய்பா அல்லது பப்பர் கல்சா ஆகிய அமைப்புகளில் ஒன்றே இதற்குக் காரணமாக இருக்க முடியும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். பாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கும் இதில் முக்கியப் பங்கு இருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
தேசிய பாதுகாப்புப் படை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் டெல்லியிலிருந்து லூதியானா விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications