தென்காசி கொலை வழக்கு-நீதிபதியிடம் வாக்குவாதம்
தென்காசி:
கொலை வழக்கில் கைதானவர்கள் நீதிபதியிடம் வாக்குவாதம் செய்யததால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அனீபா உள்பட 11 போலீசார் தென்காசி நடுவர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதியிடம் அனீபாவின் தம்பி அலாவுதீன் வாக்குவாதம் செய்யததால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசியில் சமீபத்தில் நடந்த மோதலில் இரு மதங்களைச் சேர்ந்த 6 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக கைதான அனீபா உள்பட அவரது தரப்பை சேர்ந்த 11 பேர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இந்த வழக்கு தொடர்பாக அவர்களை போலீசார் பலத்த பாதுகாப்புடன் தென்காசி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வந்தனர்.
நீதிமன்றத்திற்கு செல்லும் முன்பு தென்காசி இன்ஸ்பெக்டர் சந்திரசேகரனை பார்த்து நீங்கள் இன்னும் தென்காசியில் தான் இருக்கிறீர்களா, வேறு இடத்திற்கு செல்லவில்லையா, ஏன் எங்கள் உறவினர்கள் வீடுகளுக்கு சென்று மிரட்டுகிறீர்கள் என்று கேட்டு வாக்குவாதம் செய்தனர்.
பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதியிடம் எங்களை மதுரை அல்லது பாளையங்கோட்டை சிறைக்கு மாற்ற வேண்டும். எங்கள் உறவினர்களை போலீசார் மிரட்டுகின்றனர். அவர்களை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றனர்.
அவர்கள் சொல்வதை நீதிபதி குருவையா பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது தீடீரென அனீபாவின் சகோதரர் அலாவுதீன் நீதிபதியை பார்த்து என்ன சரி, சரி என்று கூறுகிறீர்கள், நான் சொல்வதை எழுதி நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா என்று ஆவேசமாக கேட்டார்.
அதற்கு நீதிபதி குருவையா உங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுங்கள் கவனிக்கிறேன் என்றார். பின்னர் 11 பேருக்கும் காவலை இம்மாதம் 29ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.