தம்பி சாவால் மனம் உடைந்த அண்ணன் தற்கொலை
வேளாங்கண்ணி:
சுனாமியில் தம்பி இறந்த சோகத்தைத் தாங்க முடியாத அண்ணன் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழகத்தை சுனாமி தாக்கியது. வேளாங்கண்ணியில் சுனாமி அலைத் தாக்குதலில் சிக்கி பெங்களூரைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பவர் இறந்தார்.
அவரது அண்ணனான அகஸ்டின், கடந்த 3 ஆண்டுகளாக தம்பியின் சாவை எண்ணி வருத்தமடைந்து காணப்பட்டார். இந்த நிலையில், 2 நாட்ளுக்கு முன்பு வேளாங்கண்ணிக்கு வந்தார் அகஸ்டின். அப்போது தம்பியின் நினைவு அவரை வாட்டியது.
இதையடுத்து மதுக் கடைக்குச் சென்ற அவர் மது வாங்கி அதில் விஷத்தைக் கலந்து குடித்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பினார். ஆனால் பஸ் நிலையம் வந்ததும் அவர் மயக்கமடைந்து சுருண்டு விழுந்து இறந்தார்.
பெங்களூரில் உள்ள அகஸ்டினின் பெற்றோருக்குப் போலீஸார் தகவல் கொடுத்து வரவழைத்தனர். பின்னர் அவர்களிடம் அகஸ்டினின் உடல் ஒப்படைக்கப்பட்டது.