பள்ளிகளில் செல்போன்களுக்கு தடை-அமலுக்கு வந்தது
சென்னை:
தமிழத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள் செல்போன்களை பயன்படுத்த அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தத் தடை அமலாகவுள்ளது குறித்து நாம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இந் நிலையில் இது தொடர்பான உத்தரவை பள்ளிக் கல்வித்துறை இன்று வெளியிட்டது.
பெரும்பாலான செல்போன் ஆபாச படங்கள், வீடியோக்கள், எஸ்எம்எஸ்கள் பள்ளி மாணவர்களின் செல்போன்களில் உலா வருகின்றன. மேலும் ஆபாச படங்களை செல்போன்களில் டவுன்லோடு செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் பள்ளி மாணவர்கள் தான் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் பாடம் நடக்கும்போது எஸ்எம்எஸ் அனுப்புவது, செல்போனில் பேசுவது என்று மாணவர்கள் வகுப்புகளை கவனிக்காத நிலையும் அதிகரித்து வந்தது.
இதனையடுத்து பள்ளிகளில் மாணவ-மாணவிகள் செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்குமாறு சிபிசிஐடி போலீசார் அரசுக்கு பரிந்துரை செய்தனர். இது குறித்து கடந்த சில நாட்களாகவே அரசு ஆலோசனை நடத்தி வந்தது.
இந் நிலையில் இன்று தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர்கள் பள்ளி நேரங்களில் செல்போன் பயன்படுத்துவதால் அவர்களது கவனம் முழுக்கக் கல்வி கற்பதிலிருந்து திசை திரும்புகிறது என்றும், இதன் காரணமாக ஆசிரியர்களின் கல்வி கற்பிக்கும் திறனும் வீணடிக்கப்படுகிறது என்றும் பல கல்வியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அரசின் கவனத்திற்கு தொடர்ந்து கொண்டு வந்துள்ளனர்.
மேலும் பாடங்களில் கவனத்தை முழுமையாகச் செலுத்தாமல் செல்போன் மூலம் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்புவதில் கவனம் செலுத்தும் மாணவ-மாணவியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பள்ளிக் கூடங்களில் செல்போன் பயன்படுத்துவதை முழுமையாக தடை செய்வதால் மாணவர்கள் மிகுந்த பயனடைவதுடன் கல்வியில் நல்ல அக்கறை செலுத்துவார்கள். ஆசிரியர்களின் கல்வி கற்பிக்கும் திறமையை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு சிறந்த மாணவர்கள் உருவாக வாய்ப்பு உண்டு என்று கருதுவதால் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவியர்கள் வயது வரம்பின்றி செல்போன் கொண்டு வருவதைத் தடை செய்வது குறித்து அரசு பரிசீலித்தது.
இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் கல்வி கற்கும் மாணவ-மாணவியர்கள் வயது வரம்பின்றி பள்ளி வளாகங்களுக்குள் செல்போன் கொண்டு வருவதை தடை செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
தமிழக அரசின் இந்த முடிவிற்கு ஏற்ப மாணவ-மாணவியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தப்பட்டுள்ளார் என்று அமைச்சர் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications