மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது தடியடி- ஜெ. கண்டனம்
சென்னை:
சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்காக முதல்வர் கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கை:
மாணவர்க
ள் நாட்டின் ஜனநாயகத்தின் முதுகெலும்பு போன்றவர்கள். மாணவர்களின் மகத்தான சக்தியால்தான் திராவிட இயக்கம் வளர்ந்தது. அத்தகைய சிறப்பு வாய்ந்த மாணவர் சமுதாயம் மீது மாநிலக் கல்லூரிக்குள் போலீஸார் அத்துமீறி நுழைந்து கொடூரத் தாக்குதல் நடத்தியது கண்டனத்துக்குரியது. இதில் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது மன வேதனை தருகிறது.
மாணவர்களைப் பதம் பார்ப்பது என்பது முதல்வர் கருணாநிதிக்கு கை வந்த கலை. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெறுவதற்காக மாணவர் உதயக்குமார் கொலை செய்யப்பட்டார். அவரது பெற்றோரை விட்டே உதயக்குமார் தங்களது மகன் இல்லை என்று சொல்ல வைத்த கொடுமை கருணாநிதியின் அரசியல் பயணத்தில் நினைவு கூறத்தக்க ஒன்று.
ஆசிரியர் பற்றாக்குறையைக் கண்டித்து தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மாணவர்களும், பெற்றோர்களும் போராட்டம் நடத்தியபோது அவர்களை காவல்துறையினரை விட்டு கண்மூடித்தனமாக தாக்கினர். சென்னை சட்டக் கல்லூரி விடுதிக்குள் நுழைந்து மாணவர்களைக் கடுமையாகத் தாக்கியது, மதுரை அரசு சட்டக் கல்லூரி மாணவர்களைத் தாக்கியது, செங்கல்பட்டு சட்டக் கல்லூரிக்குள் நுழைந்து திமுகவினர் தாக்குதல் நடத்தியது, சேலம் தனியார் சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறையை ஏவி விட்டு அராஜகம் செய்தது ஆகியவை கருணாநிதி ஆட்சிக்காலத்தில் மாணவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட, மறக்க முடியாத தாக்குதல்கள்.
மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறையினரே கற்களை வீசித் தாக்கியுள்ளது வேதனை தருகிறது. அமைதியை ஏற்படுத்த வரவழைக்கப்பட்ட காவல்துறையினரே அமைதியின்மையை ஏற்படுத்த வழி வகுத்தது, வேலியே பயிரை மேய்ந்ததற்கு ஒப்பானது.
மாணவர்களை போலீஸார் மிருகத்தனமாக தாக்கியுள்ளனர். வன்முறையாளர்கள் போல செயல்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் பூரண குணமடைந்து விரைவில் அவர்கள் படிப்பதைத் தொடர வேண்டும். கல்வி லட்சியத்தை வென்றெடுத்து நாட்டுக்கும், சமுதாயத்திற்கும் சேவையாற்ற வேண்டும்.
மாநிலக் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். இதற்கு முதல்வர் கருணாநிதி தார்மீகப் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
(அப்படியே கோவை வேளாண்மைக் கல்லூரியின் மூன்று மாணவிகளை உயிரோடு கொளுத்தியவர்களுக்கும் ஜெயலலிதா தண்டனை கேட்டால் நன்றாக இருக்கும்)












Click it and Unblock the Notifications