100 வயதைத் தொட்டது ஊட்டி மலை ரயில்!!
ஊட்டி:
மேட்டுப்பாளையத்திற்கும், ஊட்டிக்கும் இடையிலான மலை ரயில் 100 வயதைத் தொட்டுள்ளது. இதையொட்டி ஊட்டி ரயில் நிலையத்தில் கேக் வெட்டி மலை ரயிலின் பிறந்த நாள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் ஊட்டியின் அழகுக்கு அழகூட்டும் ஒரு அம்சம் மலை ரயில். நீண்டு நெளிந்து கிடக்கும் மலைகளின் ஊடாக, ஜிகுஜிகுவென மெல்ல மெல்ல அசைந்து போகும் மலை ரயிலில் பயணம் செய்யாவிட்டால் ஊட்டி பயணம் நிச்சயமாக நிறைவு பெறாது.
100 வருடங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை மலை ரயில் பாதை அமைக்கப்பட்டது. பின்னர் இந்த ரயில் பாதை ஊட்டி வரை நீடிக்கப்பட்டது.
கடந்த 2005ம் வருடம் உலக பாரம்பரிய சின்னமாக ஊட்டி மலை ரயில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து உலக சுற்றுலா வரைபடத்தில் ஊட்டி மலை ரயிலும் இடம் பெற்றது.
நீலகிரிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில் 90 சதவீதம் பேர் இந்த மலை ரயிலில் பயணம் செய்கிறார்கள். மலை ரயில் ஊட்டிக்கு இயக்கப்பட்டு 99 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது. நேற்று 100வது ஆண்டு துவங்கியது.
இதையொட்டி நீலகிரி பாரம்பரிய மலை ரயில் அறக்கட்டளை சார்பில் ஊட்டி ரயில் நிலையத்தில் விழா நடைபெற்றது. விழாவில் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தோஷ் மிஸ்ரா கலந்து கொண்டார். இந்த விழாவில் கேக் வெட்டி அங்கு வந்த அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் கொடுக்கப்பட்டது.
நீலகிரி பாரம்பரிய ரயில் அறக்கட்டளை தலைவர் நடராஜ் பின்னர் கூறுகையில், தற்போது ஊட்டி-குன்னூர் இடையே டீசல் இன்ஜின் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. சுற்றுலா பயணிகள் நீராவி இன்ஜினில் பயணம் செய்வதையே விரும்புகிறார்கள்.
பழைய பாரம்பரியம் மாறாமல் இருக்க வேண்டுமென்றால் மீண்டும் ஊட்டி-குன்னூர் இடையே நீராவி இன்ஜின்களை இயக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications