வராத கலெக்டர் - வருத்தத்தில் கிராமம்
திருநெல்வேலி:
விஷக் காய்ச்சல் பாதிப்புக்குள்ளான கிராமத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வராததால் அந்தக் கிராமத்தினர் வேதனை அடைந்தனர்.
தமிழகத்தில் தற்போது பல மாவட்டங்களில் சிக்குன்-குனியாவைப் போல் புதிதாக ஒரு காய்ச்சல் பரவி வருகிறது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஆரம்பித்த இந்தக் காய்ச்சல் இப்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவி வருகிறது.
இந்த மர்ம காய்ச்சலுக்கு நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்திலும் இவ் விஷகாய்ச்சல் பரவியுள்ளது.
புளியங்குடி அருகேயுள்ள ஆண்டார்குளம் என்ற கிராமத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் இந்நோய் தாக்குதலுக்கு ஆளாகி பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இரண்டு முதியவர்கள் மற்றும் ஒரு சிறுமி ஆக 3 பேர் பலியாகியுள்ளனர்.
அப்பகுதியில் கடந்த 13ம் தேதி முதல் மருத்துவ குழுவினர் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். அன்று இரவு புளியங்குடியில் ரோட்டரி கிளப் மரம் நடுவிழா உள்ளிட்ட விழாவில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கோ.பிரகாஷ் கலந்து கொண்டார்.
விழா முடிந்தவுடன் ஆண்டார்குளம் கிராமத்திற்கு அவர் வருவார். அவரிடம் குறைகளை சொல்லலாம் என்று அங்கு வசிக்கும் கிராம மக்கள் முடிவு செய்து காத்திருந்தனர். ஆனால் கலெக்டர் ஆண்டார்குளத்திற்கு வராமல் போய் விட்டார்.
கலெக்டருக்காக காத்திருந்த பொதுமக்கள் பெரும் வேதனையும், ஏமாற்றமும் அடைந்தனர். விஷக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தங்களது கிராமத்திற்கு ஆட்சித் தலைவர் வராதது அக்கிராமத்தினரை வருத்தமடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications