பஸ் தொழிலாளர்களுக்கு முழு போனஸ்-விஜயகாந்த்
சென்னை:
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான தீபாவளி போனஸை பிரித்து கொடுக்காமல் முழுமையாக கொடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு போனஸ் தொகை ரூ. 6,000 மட்டும் வழங்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசால் போனஸ் சட்டத் திருத்தம் செய்யப்பட்டதும் மீதித் தொகை ரூ. 2,400 வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த தொகையை பிரித்துத் தராமல் மொத்தமாக ரூ. 8,400யை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஒரே நேரத்தில் வழங்கவேண்டும்.
கூடுதலான ரூ. 2,400ஐ தற்போது கருணைத் தொகையாக கணக்கில் வைத்துக் கொண்டு மத்திய அரசின் சட்டம் நிறைவேறியதும் அதையே போனசாக மாற்றிக் கொள்ளலாம்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை ஈடு செய்வதாக திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. ஆனால் கடந்த காலத்தில் கடைபிடிக்கப்பட்ட மாதிரி, 3 ஆண்டு காலத்திற்கு ஊதிய உயர்வு ஒப்பந்தத்தையே தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.