நாயுடுவுக்கு ரூ.4000 கோடி சொத்து - சிவபார்வதி புகார்
ஹைதராபாத்:
முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ. 4000 கோடி அளவுக்கு சொத்து குவித்துள்ளார். இதுகுறித்து விரிவாக விசாரிக்க வேண்டும். இதற்கு வசதியாக, தனது சொத்து மதிப்பு குறித்து விசாரிக்க இடைக்காலத் தடை வாங்கியுள்ளதே நாயுடுவே முன்வந்து நீக்க வேண்டும் என்று மறைந்த என்.டி.ராமாராவின் மனைவி லட்சுமி சிவபார்வதி கோரியுள்ளார்.
ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் இதுகுறித்துப் பேசுகையில்,
ஊழல் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் 2004ம் ஆண்டு சந்திரபாபு நாயுடு மீது நான் வழக்கு தொடர்ந்தேன். ஆனால் அந்த வழக்கு தொடர்பாக சந்திரபாபு நாயுடு மீது விசாரணை நடத்த ஆந்திர உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
அவருக்கு பின் முதல்வராக ராஜசேகரரெட்டி பதவியேற்ற பின்பும் இந்த தடை தொடர்ந்து அமலில் இருக்கிறது. சந்திரபாபு நாயுடு வழக்கு குறித்த விவகாரத்தில் நீதிபதிகள் அமைதி காப்பது ஏன் என்று தெரியவில்லை.
அரசியலுக்கு வந்த பின்பு அரசியல்வாதிகள் சேர்த்துள்ள சொத்து குறித்து அனைத்து அரசியல்வாதிகளிடமும் விசாரணை நடத்த வேண்டும்.
நாயுடுவும் தானாக முன்வந்து இடைக்காலத் தடையை நீக்க உத்தரவு பெற்று, தான் நிரபராதி என்பதை நிரூபிக்க வேண்டும்.
கடந்த 2001ல் தெஹல்கா டாட் காம் என்ற இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், சந்திரபாபு நாயுடு தான் இந்தியாவிலேயே பணக்கார அரசியல்வாதி. அவருக்கு 2000 கோடி மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தது.
சந்திரபாபு நாயுடு அரசியலுக்கு வருவதற்கு முன்பு அவருடைய தந்தையின் 2 ஏக்கர் நிலம் தான் சொந்தமாக இருந்தது. ஆனால் அரசியலுக்கு வந்த பின்னர், தன்னுடைய பினாமிகள் பெயரில் மாதவூரில் 120 ஏக்கர் நிலமும், நெல்லூர் மாவட்டத்தில் 400 ஏக்கர் நிலமும், மைசூர் ரோட்டில் 45 ஏக்கர் நிலமும், ஒரிசா மாநிலத்தில் உள்ள கோபால்பூரில் 100 ஏக்கர் நிலமும் வாங்கியுள்ளார்.
இது தவிர இவருக்கு சிங்கப்பூரில் ஹோட்டலும், மலேசியாவில் மிகப்பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்சும் இருக்கின்றது.
சந்திரபாபு நாயுடுவுக்கு ரூ. 4000 கோடி மதிப்புக்கு சொத்துக்கள் உள்ளன. இதுதவிர சுவிஸ் வங்கிகளில் ரகசியக் கணக்கும் உள்ளன.
சந்திரபாபு நாயுடு பலமுறை சுவிட்சர்லாந்து சென்று வந்துள்ளதை நான் ஆதாரங்களுடன் மத்திய அரசுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளேன். சந்திரபாபு நாயுடு மீதான வழக்கு குறித்து ஏதாவது ஆதாரங்கள் வேண்டுமென்றால் அதை நான் கொடுக்க தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.