அதிமுக 36வது ஆண்டு விழா கொண்டாட்டம்
சென்னை:
அதிமுக தொடங்கப்பட்டு 35 ஆண்டுகள் முடிந்து 36வது ஆண்டு பிறப்பதையொட்டி சென்னையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் உள்ள எம்.ஜிஆர். சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மாலை அணிவித்தார். மாநிலம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் 1971ம் ஆண்டு இதே நாளில்தான் எம்.ஜி.ஆர். அதிமுகவைத் தொடங்கினார். இதையொட்டி இன்று மாநிலம் முழுவதும் அதிமுகவினர், கட்சியின் பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர்.
சென்னைய ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கட்சிப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வருகை தந்து நிறுவன நாள் விழாவில் கலந்து கொண்டார். (இவர் கட்சி அலுவலகத்துக்கு வருவதே ஒரு நியூஸ் தான்)
அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் அவர் விழா மலரை வெளியிட, கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் பெற்றுக் கொண்டார்.
கட்சியின் இலக்கிய அணிச் செயலாளர் வைகைச் செல்வன் எழுதிய கனவோடு வெகு தூரம் என்ற புதினத்தின் 2ம் பாகத்தை ஜெயலலிதா வெளியிட, அதை பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டார்.
பின்னர் கூடியிருந்த அனைவருக்கும் ஜெயலலிதா இனிப்புகளை வழங்கினார். முன்னதாக அவருக்கு பூரண கும்ப மரியாதை அளித்து அதிமுகவினர் வரவேற்றனர்.












Click it and Unblock the Notifications