ஆனந்த்துக்கு சென்னையில் இன்று பிரமாண்ட வரவேற்பு
சென்னை:
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை 2வது முறையாக வென்று தாயகம் திரும்பியுள்ள விஸ்வநாதன் ஆனந்த்துக்கு இன்று பிற்பகல் சென்னையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. சாரட் வண்டியில் அவர் ஊர்வலமாக வீட்டுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.
மெக்சிகோவில் நடந்த உலக செஸ் சாம்பியன் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் பட்டம் வென்றார். அவர் 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
இதையடுத்து முன்தினம் ஆனந்த் தாயகம் திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு மனைவி அருணாவுடன் சென்ற ஆனந்த், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பின்னர் நேற்று மாலை டெல்லியில் அவருக்கு செஸ் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. திறந்த காரில் அழைத்துச் செல்லப்பட்டு கெளரவிக்கப்பட்டார் ஆனந்த்.
இந்த நிலையில் இன்று பிற்பகல் ஆனந்த் சென்னை திரும்புகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தமிழக செஸ் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. சென்னை வரும் ஆனந்துக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு தரப்படுகிறது.
பின்னர் அடையாறு பாலத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட சாரட் வண்டியில் ஆனந்த் ஏற்றப்பட்டு அவரது வீடு வரை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகிறார். இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு பெரும் திரளாக திரண்டு வருமாறு செஸ் ரசிகர்களுக்கு செஸ் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
ஆனந்த்துக்கு தமிழக அரசு ரூ. 25 லட்சம் பரிசுத் தொகையை ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை திரும்பிய பின்னர் முதல்வர் கருணாநிதியை ஆனந்த் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications