மதுரை இரட்டை கொலை வழக்கில் 6 பேர் கைது!
மதுரை:
மதுரையில் நடந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக மேலும் இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
மதுரையில் வைகை ஆறு பகுதியில் ராமராயர் மண்டபம் அருகில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 பேர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
இது தொடர்பாக மதிச்சியம் போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். எல்லீஸ் நகரைச் சேர்ந்த அம்பிகாபதி, பழனி, தர்மர், நாகராஜன் மற்றும் செல்லத்துரை ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
இதையடுத்து இந்த கொலைகளில் தொடர்புடைய மணிகண்டன் என்பவர் தேனி நீதிமன்றத்திலும், வாசு என்பவர் மதுரை நீதிமன்றத்திலும் சரணடைந்துள்ளனர்.
இதுவரை போலீசார் கையில் கிடைக்காமல் இருந்த குணா நேற்று மதுரையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர்களிடம் இந்த கொலைகளுக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.