பரபரப்பு சூழ்நிலையில் கூடுகிறது தமிழக சட்டசபை
சென்னை:
தமிழக சட்டசபையின் மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று கூடுகிறது. அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், பாமக ஆகியவை சூடான பிரச்சினைகளுடன் கூட்டத்தை சந்திக்கத் திட்டமிட்டுள்ளதால் அவை நடவடிக்கைகள் புயலைக் கிளப்பும் எனத் தெரிகிறது.
தமிழக சட்டசபையின் மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது. முதல் நாளான இன்று மறைந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் 7 பேருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்படும். பின்னர் அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் மீண்டும் கூடும்.
இன்றைய தினம் நான்கு அவசரச் சட்டங்களுக்கான மசோதாக்கள் கொண்டு வரப்படவுள்ளன. இதையடுத்து அலுவல் ஆய்வுக் குழு கூடி சபையை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். கிட்டத்தட்ட 10 நாட்கள் இக்கூட்டம் நடைபெறும் எனத் தெரிகிறது.
இந்தக் கூட்டத் தொடரில் ஒவ்வொரு கட்சியும் ஒரு சூடான பிரச்சினையுடன் சபையை சந்திக்கக் காத்துள்ளன.
பந்த் பிரச்சினையுடன் அதிமுக:
தமிழகத்தில் அக்டோபர் 1ம் தேதி உச்சநீதிமன்றத்தின் தடையையும் மீறி திமுக கூட்டணி பந்த் நடத்தியதாக கூறி உச்சநீதிமன்றத்தில் அதிமுக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த பந்த் விவகாரத்தை சட்டசபையில் பெரிதாக கிளப்ப அதிமுக திட்டமிட்டுள்ளது. இதேபோல, ஜெயலலிதாவின் வீட்டுக்குள் நேற்று மர்ம நபர் நுழைந்த விவகாரத்தையும் பெரிதாக்க அதிமுக தீவிரமாக உள்ளது.
இதேபோல அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாகவும், விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்ட பல பிரச்சினைகளையும் அதிமுக எழுப்பக் கூடும் என்று தெரிகிறது.
திமுகவுக்கு கோடநாடு:
அதேசமயம், கோடநாடு எஸ்டேட் பிரச்சினையை பெரிதாக்கி அதிமுகவை கவுண்டர் செய்ய திமுக தரப்பு தயாராக உள்ளது. கோடநாடு எஸ்டேட் தொடர்பான பல விவரங்களை சட்டசபையில் அரசுத் தரப்பு வெளியிடக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
கம்யூனிஸ்டுகளின் பட்டா ஆயுதம்:
கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பொறுத்தவரை ஏழைகளுக்கு இலவச மனைப் பட்டா வழங்கும் விவகாரத்தை எழுப்பக் கூடும் என்று தெரிகிறது.
பல பிரச்சினைகளுடன் பாமக:
சிறப்பு பொருளாதாரா மண்டல ஒழிப்பு, என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை, டைட்டானியம் திட்டம், மணல் கொள்ளை உள்ளிட்ட பல பிரச்சினைகளுடன் பாமக உள்ளது.
அதிமுகவைப் பொறுத்தவரை அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பிரச்சினைகளைப் பெரிதாக்க முயலும். அதேசமயம், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளால் பெரிய அளவுக்கு நெருக்கடி ஏற்படாது என்று தெரிகிறது.
மொத்தத்தில், இந்தக் கூட்டத் தொடர் மழைக்காலக் கூட்டத் தொடராக இருந்தாலும் கூட பொறி பறக்கும் கூட்டத் தொடராக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.