ராஜபாளையத்தில் கவுன்சிலர்கள் கடத்தல்!
ராஜபாளையம்:
ராஜபாளையத்தில் துணைத் தலைவர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் கவுன்சிலர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
ராஜபாளையம் நகர சபைக்கான துணைத் தலைவர் பதவிக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக சார்பில் மணிகண்டனும், காங்கிரஸ் கட்சியின் சார்பில் பீமராஜாவும் போட்டியிடுகின்றனர்.
ராஜபாளையம் நகராட்சியில் மொத்தம் 42 கவுன்சிலர்கள் உள்ளனர். அதிமுகவுக்கு 10, திமுகவுக்கு 7, காங்கிரசுக்கு 17, மதிமுகவுக்கு 2, இந்திய கம்யூனிஸ்டுக்கு 2, தேமுதிகவுக்கு 1, புதிய தமிழகம் கட்சிக்கு 1 கவுன்சிலர்களும் 1 சுயேச்சை கவுன்சிலரும் உள்ளனர்.
துணைத்தலைவர் பதவியை பிடிக்க 21 கவுன்சிலர்கள் ஆதரவு தேவை. ஆனால், திமுக கவுன்சிலர்களின் ஆதரவு பீமாராஜாவுக்கு கிடைப்பது சந்தேகமே. இதனால் பதவியைப் பிடிக்க அங்கு கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் பீமராஜாவின் ஆதரவாளர் அர்ச்சுனன் அதிமுக உள்பட பிற கட்சிகளின் கவுன்சிலர்களை வளைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். இதனால் எதிர்தரப்பு கடும் கோபத்தில் இருந்ததது.
பஸ் நிலையம் அருகில் பீமராஜாவும் அர்ச்சுனனும் கவுன்சிலர்கள் சிலருடன் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த டாடா சுமோ காரிலிருந்து இறங்கிய மர்ம நபர்கள் அர்ச்சுனனை கத்தியால் குத்திவிட்டு அவருடன் இருந்த 4 கவுன்சிலர்களை கடத்திச் சென்றுவிட்டனர்.
கத்திகுத்து வாங்கிய அர்ச்சுனன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் அப் பகுதியில் பெறும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.