புதிய வாக்காளர் சேர்ப்பு நவம்பரில் துவக்கம்
நாகர்கோவில்:
புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பதை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும், 1.1.2008 வரை 18 வயது பூர்த்தி செய்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது குறித்தும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நாகர்கோவிலில் ஆலோசனை நடத்தினார்.
இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் குப்தா கூறியதாவது,
2008ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி 18 வயது பூர்த்தி அடைபவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணி வரும் நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கும். இந்தப் பணி அடுத்த ஆண்டு ஜனவரி 11ம் தேதி நிறைவடையும்.
தொகுதிகள் மறு சீரமைப்பு குறித்து மறுவரையறை ஆணையம் தான் பரிசீலித்து வருகிறது. இதில் என்னால் எதுவும் செய்ய முடியாது. இதனால் அது குறித்து கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை.
வாக்காளர்கள் இடம் பெயர்ந்தால் அவர்களது முகவரி மட்டுமே மாறும். அவர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை அப்படியே இருக்கும். அதனை அவர்கள் வாக்களிக்க பயன்படுத்தி கொள்ளலாம். புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைக்கு காலவரையறை எதுவும் வழங்கப்படவில்லை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் தயாரிக்கும் பணிகள் 97 சதவீதம் முடிந்துவிட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் 96 சதவீதமும், திருநெல்வேலியில் 94 சதவீதமும் முடிவடைந்துள்ளது.
தமிழகத்தில் 95 சதவிகித புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம் ஆகிய ஆவணங்களை காண்பித்து தேர்தலில் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. 100 சதவீதம் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்ட பின்னர் வாக்காளர் அட்டையை மட்டுமே பயன்படுத்தி வாக்களிக்க முடியும் என்ற உத்தரவை தேர்தல் ஆணையம் வெளியிடும்.
புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள புகைப்படங்களில் முகம் தெளிவாக இல்லாவிட்டாலோ, 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அட்டைகளை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தாலோ அதை மாற்றித் தருவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும் என்றார் குப்தா.












Click it and Unblock the Notifications