சிறுநீரக மோசடி: மருத்துவமனையின் ஆபரேஷன் உரிமம் ரத்து
சென்னை:
சிறுநீரக மோசடி தொடர்பாக சென்னை தி.நகரில் உள்ள நியூ பாரதிராஜா மருத்துவமனையின் அறுவைச் சிகிச்சை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சிறுநீரக மோசடி தொடர்பாக சென்னையைச் சேர்ந்த டாக்டர் பழனி ரவிச்சந்திரன் சமீபத்தில் மும்பையில் கைது செய்யப்பட்டார்.
அவர், சென்னை தி.நகர் மேட்லி சாலையில் உள்ள பாரதிராஜா மருத்துவமனை, ஜி.என்.செட்டி சாலையில் உள்ள நியூ பாரதிராஜா மருத்துவமனை மற்றும் பரங்கிமலையில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனை ஆகியவற்றைப் பயன்படுத்தி அவர் சிறுநீரக மோசடியை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து மும்பை போலீசார் சென்னை வந்து அந்த மருத்துவமனைகளில் தீவிர சோதனை நடத்தினர். இது தவிர வருமானவரி அதிகாரிகளும் சோதனை நடத்தி அந்த மருத்துவமனைகளில் உள்ள ஆபரேசன் தியேட்டர்களுக்கு சீல் வைத்தனர்.
இதன் பின்னர் தமிழக காவல் துறையினரும், மருத்துவ கல்வி இயக்குனர்களும் சோதனை நடத்தினர். இதையடுத்து மூன்று மருத்துவமனைகளின் உரிமங்களும் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் நியூ பாரதிராஜா மருத்துவமனையின் ஆபரேஷன் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக மருத்துவ பணிகள் இயக்குனர் பாவா பக்ருதீன் கூறுகையில், தமிழகத்தில் சிறுநீரக அறுவைச் சிகிச்சை நடைபெறும் 54 மருத்துவமனைகளிலும் சோதனை நடத்தி அங்குள்ள ஆவணங்கள் சரியாக உள்ளதா என்று சோதனை செய்து வருகின்றோம்.
சென்னையில் டாக்டர் ரவிச்சந்திரன் அறுவை சிகிச்சை செய்த 3 மருத்துவமனைகளில் பாரதிராஜா மருத்துவமனையில் நாங்கள் சோதனை போட்டதில் போதிய ஆவணங்கள் கிடைக்கவில்லை. அனைத்தையும் வருமானவரி அதிகாரிகள் எடுத்துச் சென்றுவிட்டனர்.
செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யாமல் நோயாளிகளை தங்கவைத்து சிகிச்சை அளித்ததால் அங்கு சில ஆவணங்கள் கிடைத்தன. இதனால் அந்த மருத்துவமனைகளின் சிறுநீரக அறுவை சிகிச்சை உரிமத்தை ரத்து செய்து விட்டோம்.
தற்போது ஜி.என்.செட்டி ரோட்டில் உள்ள நியூ பாரதிராஜா மருத்துவமனையின் சிறுநீரக அறுவை சிகிச்சை உரிமமும் ரத்து செய்யப்பட்டு விட்டது.
மும்பை போலீசாரிடமும், வருமானவரி அதிகாரிகளிடமும் நாங்கள் சில விவரங்களை கேட்டுள்ளோம். அது கிடைத்த பின்னரே இந்த வழக்கு குறித்த முழு விவரங்களும் தெரியவரும். இதனால் முழுமையாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
சிறுநீரக அறுவைச் சிகிச்சைகளில் போலியாக முகவரியை பயன்படுத்தி சிலர் மோசடி செய்வதாக தகவல் வந்துள்ளதால் எங்கள் விசாரணை குழுவில் காவல்துறை அதிகாரிகளும் இனி இடம் பெறுவார்கள்.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களிடம் சிறுநீரக மோசடி நடந்துள்ளதாக கடந்த வருடம் புகார் வந்தபோது, ஆவணங்களை சரியாக பராமரிக்காத 13 மருத்துவமனைகளின் மீது நடவடிக்கை எடுத்து அதன் உரிமங்களை ரத்து செய்திருந்தோம். அந்த மருத்துவமனைகளின் சார்பில் இனிமேல் இதுபோன்று நடக்காது என்று உறுதி அளித்துள்ளதால் அந்த நடவடிக்கையை ரத்து செய்தோம்.
தற்போது மீண்டும் பிரச்சனை வந்துள்ளதால் அனைத்து மருத்துவமனைகளிலும் விசாரணை செய்து வருகிறோம் என்றார்.