ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு இல்லை-வைகோ
சென்னை:
முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதாவிற்கு தமிழக அரசு போதிய பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டிற்குள் தீய நோக்கத்துடன் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து வீட்டின் மேல்மாடி நூலகம் வரை சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவுக்கு அவன் ஆபத்து விளைவித்திருக்கக் கூடும் என்று நினைக்கும் போதே பதட்டமும், கவலையும் அளிக்கின்றது.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்குலைத்து அப்பணியில் ஈடுபட்ட காவலர்களை பெருமளவில் திரும்பப் பெறறுக் கொண்டு விட்டது. ஏதோ ஒப்புக்காகப் பெயரளவில் சில காவலர்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில் அனுமதி இல்லாமல் சந்தேகத்திற்குரிய விதத்தில் மர்ம நபர் வீட்டிற்குள் நுழைய காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் அனுமதித்தது திட்டமிட்ட ஏற்பாடு தானோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
முன்னாள் முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளிலும் உரிய பாதுகாப்பினை காவல்துறை கொடுப்பதில்லை. பிரதான எதிர்கட்சிகளின் மீது அராஜகமான அடக்குமுறையை ஏவி வருகிறது.
காவல்துறை ஆளும் கட்சியின் எடுபிடியாக மாறிவிட்டதால் தான் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பு விலக்கப்பட்டது.
தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் கண்டனம் தெரிவிப்பதுடன், ஜெயலலிதாவுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டுமென்பது தமிழக அரசின் கடமை என்று வலியுறுத்துகிறேன் என்று வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications